(Reading time: 19 - 38 minutes)

ளங்கோவும், வாணியும் திருமண வீட்டிற்குள் நுழையும் போது, செல்வா மணமகனாய் மண மேடையில் அமர்ந்திருந்தான்… செல்வாவை அந்த இடத்தில் பார்த்ததும் இரண்டுப் பேருக்குமே அதிர்ச்சி, ஆச்சர்யம்… துஷ்யந்தைப் பார்க்க அலுவலகத்திற்கு சென்ற இரண்டு மூன்று முறை செல்வாவை இளங்கோ பார்த்திருக்கிறான்… அதனால் செல்வா யாரென்று இளங்கோவிற்கு நன்றாக தெரிந்தது… வாணிக்கு சொல்லவே வேண்டாம், செல்வாவை சிறு வயதில் பார்த்திருந்தாலும், இப்போதும் அவனை நன்றாகவே அவருக்கு அடையாளம் தெரிந்தது…

ஆனால் மணமகனாக அவன் எப்படி..?? நடந்தது என்ன என்ற கேள்வி இருவரின் மனதில் இருந்தாலும், துஷ்யந்திற்கும் நர்மதாவிற்கும் திருமணம் நடைபெறவில்லை என்பதே இருவர் மனதிற்கும் மகிழ்ச்சியை கொடுத்தது.. அதுவும் வாணி கடவுள் மேல் இருக்க நம்பிக்கையை கைவிட்டாலும், துஷ்யந்த் மேல் வைத்த நம்புக்கையை அவர் இழக்கவில்லை… கங்காவை தவிர எந்தப் பெண்ணையும் அவன் திருமணம் செய்துக் கொள்ளமாட்டான் என்று அவர் உறுதியாக இருந்தார்… இப்போது அவர் நம்பிக்கை பொய்யாகமல் போனதும், அவர் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை…

கோமதி, விஜியோடு மணப்பந்தல் அருகே நின்றிருந்த துஷ்யந்த் இருவரையும் பார்த்துவிட்டு அவர்கள் அருகே வந்தான்… இருவரின் பார்வையும் கேள்வியை ஏந்தியிருக்க, அவர்கள் கேட்பதற்கு முன்னரே, அவனே பேசினான்…

“நேத்து வீட்டுக்கு வந்து கங்காவை பார்த்ததுக்கு அப்புறம் என்னால இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு உறுதியா தெரிஞ்சிருச்சு இளங்கோ… அதுக்கப்புறம் எல்லோருக்கும் பேசி புரிய வச்சேன்… நர்மதாவோட பேரண்ட்ஸ் வருத்தப்பட்டு பேசினப்போ தான் இந்த ஏற்பாடு… இப்போ தான் மனசுக்கு நிம்மதியா இருக்கு..” என்றதும், வாணியோ… “தம்பி…” என்று அவன் கைகளை பிடித்துக் கொண்டார்… கண்களில் கண்ணீர் துளிகள்…

“எதுக்கு அக்கா இப்போ அழறீங்க..” என்று துஷ்யந்த் அவரை தேற்றினான்…

“உங்களுக்கு மட்டும் இது நிம்மதி கொடுக்குற விஷயம் இல்லை துஷ்யந்த்… உங்களுக்கும் இன்னொரு பொண்ணுக்கும் தான் கல்யாணம் சொன்னதை என்னால ஏத்துக்கவே முடியல… அதுவும் அது நர்மதான்னு தெரிஞ்சதும்… என்னால அதை ஏத்துக்கவே முடியல… உங்க மனசு என்னன்னு எனக்கு நல்லா தெரியும்.. ஆனா நர்மதா கிட்ட என்னால அதை சொல்லவும் முடியல… நர்மதாக்கும் உங்களுக்கும் கல்யாணம் நடக்கட்டும்னு என்னால அமைதியாவும் போக முடியல… ரொம்ப குழப்பமா இருந்துச்சு, இப்போ நீங்க எடுத்துருக்க முடிவால் தான் மனசுக்கு நிம்மதியாச்சு…” என்றான் இளங்கோ..

“நர்மதாவ உனக்கு ஏற்கனவே தெரியுமா இளங்கோ?? எப்படி..??” என்றுக் கேட்டவன், “ம்ம் ஆமால்ல, யமுனா நர்மதாவோட பெஸ்ட் ப்ரண்ட்… அவ மூலமா உனக்கு நர்மதாவ தெரிஞ்சிருக்கும்..” என்றான்.

“ஆமாம்… ஆனா நர்மதா, யமுனா ரெண்டுப்பெரையும் ஒன்னா தான் நான் பர்ஸ்ட் பார்த்தேன்… நர்மதா என்ன அண்ணான்னு தான் கூப்பிடுவா… அதான் என்னால இந்த கல்யாணம் நடக்கட்டும்னு சாதாரணமா எடுத்துக்க முடியல..”

“நீ என்கிட்ட இதைப்பத்தி பேசியிருக்கலாமே..??”

“எங்க… கங்காக்கிட்ட இதைப்பத்தி பேசினேன்… இந்த கல்யாணம் உன்னால நிக்கக் கூடாதுன்னு ப்ராமிஸ் வாங்கிக்கிட்டா… அதான் என்னால உங்கக்கிட்ட எதுவும் பேச முடியல..”

“கங்காவோட பிடிவாதத்துக்காகவும், அம்மாவை கஷ்டப்படுத்தக் கூடாதுன்னும் தான், நான் இவ்வளவு தூரம் வந்ததே… ஆனா உள்ளுக்குள்ள ஒவ்வொரு நாளும் நான் தவிச்சுக்கிட்டு தான் இருந்தேன் இளங்கோ… ஆ.. அப்புறம் நேத்து நான் வீட்டுக்கு வந்ததோ, அங்க வந்ததால தான் என்னோட மனசு மாறுச்சுன்னோ கங்காக்கு எப்பவும் தெரியக் கூடாது சரியா..??”

“கண்டிப்பா நாங்க சொல்ல மாட்டோம் துஷ்யந்த்… ஆமா நர்மதா இதுக்கு எப்படி ரியாக்ட் பண்ணா… இந்த கல்யாணத்தை மனசார ஏத்துக்கிட்டாளா.??”

“உண்மையிலேயே நர்மதா க்ரேட் இளங்கோ… அவ என்னோட நிலைமையை புரிஞ்சுக்கிட்டா.. ஆனா உடனே செல்வா கூட கல்யாணம்னு சொன்னதும் அவளால ஏத்துக்க முடியல… வேண்டாம்னு மறுத்தா… ஆனா நர்மதா அப்பாவும், யமுனாவும் தான் ஒத்துக்க வச்சாங்க… சரி ரெண்டுப்பேரும் மேடைக்கு வாங்க..” என்று கூப்பிட்டான்.

“இல்லை துஷ்யந்த்… உங்களை எனக்கு தெரியும்னு நர்மதா, யமுனாக்கிட்ட காமிச்சுக்கல… இப்போ உங்கக் கூட போய் நின்னா, ஏன் சொல்லலன்னு அவங்க நினைப்பாங்க…. யமுனா நேரடியா கேட்டாலும் கேட்டுடுவா.. இப்போதைக்கு உங்களைப் பத்தி சொன்னா.. கங்காவைப் பத்தியும் சொல்லனும்… அதனால நான் இங்கேயே இருக்கேன்..” என்றான்.

“அக்கா.. நீங்களாவது மேடைக்கு வாங்க..” என்று வாணியை கூப்பிட,

“இல்லை தம்பி… என்னத்தான் ரிஷப் தம்பி கல்யாணம் நடந்தாலும், உங்க கல்யாணம் நடக்கலன்னு அம்மாக்கு வருத்தம் இருக்கும்… இப்போ என்னை வேற பார்த்தா, அது கோபமாகவும் மாறலாம்.. அதனால நான் இப்படியே ஓரமா உக்கார்ந்துக்கிறேன்..” என்றார்.

“சரி.. ரெண்டுப்பேரும் கல்யாணம் முடிஞ்சதும் சாப்பிட்டு தான் போகனும்..” என்று சொல்லி, அவர்களை உட்கார வைத்துவிட்டு மணமேட அருகே சென்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.