இளமாரனிடம் எழுதிவாங்கிக்கொண்டு அவர்களை விடுவித்தார், இளமாறனுக்கு உதவிய காவலர் அவர்களை அழைத்து காவல் நிலையம் விட்டு வெளியில் வந்தார். “தம்பி, இங்க எதுவும் பேசவேண்டாம், சீக்கிரமா இந்த இடத்தை விட்டு கிளம்புங்க!” என்றவாரே, அருகில் நின்ற ஆட்டோவை அழைத்து அவர்கள் இருவரையும் ஏற்றி விட்டார். இளமாறனும் கீர்த்தனாவும் ஏறிக்கொள்ள ஆட்டோக் கிளம்பியது.
இளமாறன் ஜன்னல் வழியே வெளியேப் பார்த்திருந்தான், மறந்தும் கூட கீர்த்தனாவின் பக்கம் அவன் திரும்பவில்லை, கீர்த்தனா இளமாறனை மட்டும் தான் பார்த்திருந்தாள், மிக் அருகாமையில் அவனைப் பார்க்க பார்க்க திகட்டாது, மீண்டும் விழிகள் அவனையே நாடியது, நல்ல உயரம், சீராக வெட்டாப்பட்ட கேசம், ஒன்றிரண்டு முடிக்கற்றை அவன் நெற்றி தோட, களையான முகம், கண்கள் அவன் மன உறுதியைக் பிரதிபலிக்க, உயரத்திற்கு ஏற்ற, உடற்பயிற்சியில் கட்டுகொப்பாக இருந்த அவன் தேகம், எல்லாவற்றிற்கும் மேலாக அவன் அவளுடையவன்..அவனைப் பற்றி தெரிந்துகொள்ள உள்ளம் ஏங்கியது..அது கண்களில் தெரிந்தது.
அவர்கள் அந்த பழைய டீக்கடையில் இறங்கிக் கொண்டனர், இளமாறன் பர்சைத் திறந்து பணத்தை நீட்டினான், “சார் சில்லறை இல்ல”
பரவாயில்ல என்பதுபோல், இளமாறன் சாடைக்காட்ட, “சார், லவ்வா? வூட்டுக்கு தெரியாம கூட்டியாந்திட்டியா?, நல்ல பொருத்தம் சார்!” – என்றான்
இளமாறனின் எரிச்சல் அவன் கண்களில் படர, “கிளம்புறீயா?” என்றான்.
“சார் நான் கூட லவ் மெரேஜ் தான், என் பொண்டாட்டி தான் சார் எனக்கெல்லாம், தங்கச்சிய நல்ல வச்சுக்கோ சார், பார்க்க அம்சமா இருக்கு”, என்று சொல்லிவிட்டு, அந்த ஆட்டோ ஓட்டுனர் கீர்த்தனாவிடம் திரும்பி “வரட்டுமா?” என சொல்ல, அவள் “ரொம்ப தேங்க்ஸ்னா!” என்றாள். ஆட்டோக் கிளம்பியது. திடீரென்று ஏற்பட்ட தனிமை ஏதோ செய்ய, தன் வண்டியின் அருகே போய் அதில் சாய்ந்துக் கொண்டான் இளமாறன். கீர்த்தனா மெதுவாக நடந்து அவன் அருகில் வந்தாள். இளமாறன் நிமிர்ந்து அவளைப் பார்க்க, அவள் அணிந்திருந்த துப்பட்டாவின் மீது படிந்து, அவள் இதயத்தோடு இணைந்து மின்னிய அந்த மஞ்சள் கயிரு அவனை ஏதோ செய்ய, “உங்க விலாசம் சொன்னீங்கன்னா, நான் பத்திரமா அங்க விட்டுர்றேன்”, அவன் அழுத்தமாக உரைக்க, கீர்த்தனா ஒரு நொடி தயங்கினாள்.
உண்மையில் தன்னைப் பற்றி இப்போது சொன்னால் அவன் தன்னை விட்டு விலகி போய்விட நினைப்பான், என அவளுக்கு தோன்ற, “நான் கீர்த்தி..இங்க பக்கத்தில தான் என் ஃப்ரண்டு வீடு இருக்கு, அப்பா, ரிட்டயர்டு, இங்க ஒரு இன்டர்வியூக்கு வரும்போது, என் ஃப்ரண்டோட கார எடுத்துட்டு வர்றபோது தான் ஆக்சிடென்ட்.. ஆயிட்டு..!” அவள் தயங்கி தயங்கி கூறினாள்.
அவனது கண்கள் அவளை மேய்ந்தது, அவனது தோளில் சாயும் உயரம், நிறம் ஒரு பொருட்டல்ல என்பதுபோல் மலர்ந்த முகம், அதில் மின்னும் புன்னகை, மெல்லிய கொடி தேகம், தோளைத்தாண்டி பரந்திருந்த கூந்தல், அவளுடைய செல்வ செழிப்பை அறிவிக்கும் சிறிய வைரத்தோடு, கழுத்தில் அவன் கட்டிய தாலிக்கு இணையாக போட்டிபோட்டு மின்னும் மெல்லிய தங்க சக்கிலி, காந்தல் பூ விரல்கள் ஒன்றில் பளிச்சிட்ட ப்ளாட்டினம் மோதிரம், பாதங்களை தழுவி நின்ற தங்க கொலுசு, போதாதா அவள் செல்வந்தன் வீட்டு பெண் என அவைகள் அவனுக்கு சொல்லியது. ஒன்றே ஒன்று அது கர்வம் சிறிதும் இல்லாத, பணிவை போர்த்திக்கொண்ட அவள் செயல் பாடுகள், அது ஒன்றே இன்னும் கீர்த்தனாவின் அருகில் அவனை நிறுத்தியிருந்தது.
“கீர்த்தி.. “ அவன் அழுத்தி உச்சரித்து அவள் முகம் பார்த்தான்,
“முதல்ல உங்க கழுத்தில இருக்கிறத களட்டி தூர எறிங்க..” – சொல்லிவிட்டு முகத்தை வேறு புறம் திருப்பிக்கொண்டான் இளமாறன்.
கீர்த்தனாவிற்கு எந்த அதிர்ச்சியும் இல்லை, அவனிடம் ஒருவாரு இதை அவள் எதிர்பார்த்தாள், ஏனோ அவளது வலதுகை மாங்கல்யத்தை அழுத்திப் பிடித்தது, எந்த சலனமும் இல்லாது அவனையே பார்த்திருந்தாள் கீர்த்தனா.
இளமாறனின் கண்கள் அவள் கையில் புதைந்திருந்த மாங்கல்யத்தைப் பார்த்தது, “கீர்த்தி, இதை நீங்க நல்ல புரிஞ்சுப்பீங்கன்னு நினைக்கிறேன், இந்த கயிருக்கு ஒரு அர்த்தமும் கிடையாது, இது ஜஸ்ட் லைக் எ பெயின் ரிலீவர், நம்ம இரண்டு பேரும் பயன் படுத்திகிட்ட ஒரு பொருள், இப்ப நம்ம ப்ராப்ளம் சால்வ் ஆயிட்டு அத தயவு செஞ்சு களட்டிபோட்டுருங்க..” – அவன் பதைபதைத்தான்.
அவள் நிதானமாக, அவனைப்பார்த்து, “சரிங்க” என்றாள்.
அவனுக்கு அது அதிர்ச்சியாய் இருந்தது. ஏதோ ஒரு ஏமாற்றம் அவனை நனைக்க, அவள் தொடர்ந்தாள். “நீங்க சொன்னது சரிதான் மாறன், இந்த மாங்கல்யம் வெரும் கயிருதான், இதுக்கு ஏதும் அர்த்தம் கிடையாது தான், என்னை பெரிய ஆபத்தில இருந்து காப்பாத்திருக்கீங்க, விபத்தில இறந்திருந்தாக்கூட பரவாயில்லை, ஆனா என்னால எங்க வீட்டுக்கு எந்த கெட்டப்பேரும் வர்றாம, என்னுடைய மானத்தை காப்பாத்தினீங்க அது போதும்”.
அவன் கிளம்ப எத்தனித்தான். “ஒரு ஐஞ்சு நிமிஷம்” அவள் குரல் அவனை தடுத்தது, திரும்பினான். “உங்களுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிட்டா?” – அவன் கண்களை ஊடுருவி நின்றது அவள் பார்வை.