(Reading time: 23 - 45 minutes)

"ஓ.. ம்.. தாராளமா போங்களேன்.. நான் தடுக்கலையே?.. ஆனால் பாருங்க நான் சொன்னபடி என் வண்டியை அசிங்கம் செஞ்சிருக்கு உங்க செல்ல ஸ்வீட்டி.. அதைத் தொடைக்கணும் இல்லை.. பேப்பர் இல்லைன்னா என்ன.. அதான் உங்க கையில கர்சீஃப் இருக்கே.. அதால அள்ளி அங்க வைத்திருக்கிற குப்பைத்தொட்டியில போடுங்கள்.." கறாராய்ச் சொன்னவனை அவளால் பார்க்கத்தான் முடிந்தது.. முறைக்கக்கூட முடியவில்லை..

அவன் அதிகாரதொனியே, சொன்னதைச் செய்யவில்லையென்றால் வேறு ஏதாவது பனிஷ்மெண்ட் கொடுப்பான் எனச் சொல்லாமல் சொல்ல.. தன் விதியை நொந்தபடி தன் அழகான கைக்குட்டையால் நாய் செய்துவைத்த அசிங்கத்தை அருவெறுப்புடன் அள்ளி அவன் வண்டி சக்கரத்தைத் துடைத்தாள்.

'பாவி.. சூரி.. காலையில் சார் பீச்சுக்கு ஜாகிங்க் போகிறார்.. நாமும் போனால் என் ஆளைச் சைட் அடிக்கலாம் என்று ஐடியாவை சொன்னால், அப்படியே ஸ்வீட்டியை கூட்டிக் கொண்டு போனால் சாரை அது துரத்தும், நீ அவரைக் காப்பாற்றுவது போல் அவர் மேல் விழு.. அவருக்கு உன் மேல் ஒரு இது வருமென்று.. அப்புறம் தந்தெனதந்தெனாதாம்.. பத்திக்கும்னு சொல்லி ஐடியா கொடுத்து.. இப்படி என்னைக் கடைசியில் அள்ள வைத்து விட்டாயே.. கிராதகி..'

பாவம் இவர்கள் போட்ட ப்ளான் எல்லாம் சரிதான்.. சரியான நேரத்திற்கு ஸ்வீட்டியையும் அழைத்தும் வந்தனர்.. அவர்கள் எதிர்பார்க்காத ஒன்று.. சிங்காரவேலன் அந்தக் கடைக்காரனிடம் லெக்ச்சர் கொடுத்துக் கொண்டிருக்க.. அதற்குள் ஸ்வீட்டி ஓடத் தொடங்க.. அதைத் துரத்திப் பிடிக்கப் பானுவும் ஓட.. அந்த ஸ்வீட்டியோ நடைபாதை அருகே வண்டியைக் கண்டவுடன் தன் இயல்பில்  கால்களைத் தூக்கி, பின் காலைக்கடன்களைக் கழிக்கத்தொடங்க.. கடைசியில் பானுவின் கதி இப்படியானது.

இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் ஜூஸைக் குடித்துவிட்டுக் கப்பை விட்டெறிந்தவள் நம்ம சண்முகசுந்தரியேதான்.. சிங்காரவேலனின் காலடியில் விழுந்தவுடன் ஒன்றும் தெரியாதது போல நைசாக நகர்ந்துவிட்டனர் சமோசா குழுவினர்.. எங்கே அவன் பிடித்துக் கொள்வானோ என்று.. அதற்குள் அவன் கடைக்காரரிடம் சென்று விட்டது அவர்களுக்கு வசதியாய்ப் போனது.. அப்பொழுது தப்பித்தவர்கள் இப்பொழுது வசமாய் அவனிடம் மாட்டினர்.. இதில் பானு தான் பாவம்.

"போதும் பானு.. இனிமேல் ஏதாவது பேப்பர் கவர் எடுத்துகிட்டு எங்கே போனாலும் போங்க.. அள்ளறதுக்கு வசதியா இருக்கும்.." என்ற சிங்காரவேலன்.. சட்டெனப் பானுவின் கைகளில் இருந்த பந்தைப் பிடுங்கி சுந்தரியின் மேல் தூக்கி வீசினான்.

"கமான் ஸ்வீட்டி காட்ச் தெ பால்.." எனக் கத்த.. அந்த நாயோ பந்தைக் கண்ட உற்சாகத்தில் அது வரை வாலையாட்டிக் கொண்டு நின்றிருந்தது வேகமாகப் பாய்ந்தோடியது.

"ஹேய் சண்முகசுந்தரி.. ஓடு முதல்ல அந்த நாயைப் பிடி.. ஓடு.. யாரையாவது கடிச்சி வைச்சா.. உங்க மூணு பேரையும் பிடிச்சி உள்ளே வைச்சிடுவானுங்க.. ஓடு.. ஓடு.." எனக் குரல் கொடுத்துச் சிரிக்க..

என்ன ஏதென்று விஷயம் புரியாமல் சுந்தரி நாயைத் துரத்த, அவளை அடுத்து மோஹிதாவும் ஓட..

"ம்.. பானு.. நீயும் ஓடும்மா.. கொஞ்சம் உடம்பாவது குறையும்.. அதுக்குதானே நாயோட பால் கேம் விளையாட வந்தீங்க பீச்சுக்கு.." என்று சிரித்தபடித் தன் வண்டியை வேகமாக உதைத்தவன் அவர்களைக் கண்டு கொள்ளாமல் பறந்தான்.

பானுவும் ஓடத் தொடங்கியவள்.. "ஏய் லூசுங்களா?.. நாம அவனை நாயை வைச்சி தொறத்த ப்ளான் பண்ணா.. கடைசியில் நம்ம ஓட விட்டுட்டான்.. ஹேய் நில்லுங்கடி.. பிசாசுங்களா?..” எனக் கத்தினாள்.

முதலில் புரியாது ஓடியவர்கள்.. பின்னர்த் திகைத்து 'அடப்பாவி.. இப்படி அள்ளவைச்சிட்டானே.." என இருவரும் ஒரே சமயத்தில் சொல்ல.. 'டேய் சிங்காரவேலா.. இருக்குடா உனக்கு.. என்னையா ஓடவிட்ட.." என மூச்சு வாங்கியபடிப் பொருமினாள் சண்முகசுந்தரி.

தொடரும்

Episode # 06

Episode # 08

{kunena_discuss:1138}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.