‘ஆஹான் எவ்வளவு நல்ல பையன்’ மடியில் இருந்து அவளை விடுவித்து இருந்தாலும் அவனது ஒரு கரம் அவளது இடையைத் தழுவிய வண்ணம் தான் இருந்தது.
‘என் பெயர் கணேஷ் ஆச்சே. இது வரை கட்டை பிரம்மச்சாரியா ஒரு பொண்ணையும் நிமிர்ந்து கூட பார்க்காம இருந்தேன் தெரியுமா’
அவன் சொல்லவும் அவள் கலகலவென சிரித்தாள்.
‘ஆனா உங்க பேரில் ராமும் இருக்காறே’ கண்ணடித்துச் சொல்லவும் அந்த கண்களுக்கு குளிர் முத்தம் ஒன்றைப் பரிசளித்தான்.
‘அதனால் தான் என் அர்ஷூவைப் பார்த்ததும் சரண்டர் ஆகிட்டேன். அந்த ராமனுக்கு எப்படி சீதை எல்லாமுமாக இருந்தாளோ அப்படி இந்த ராமிற்கு அர்ஷூ’
‘அந்த ராமன் சீதையை காட்டுக்கு அனுப்பினார் தெரியுமில்லையா. அது மாதிரி’ அவள் சொல்லி முடிக்கும் முன்னே அவளின் வாயைப் பொத்தினான்.
‘எந்த சூழ்நிலையிலும் உன்னை நான் பிரியவே மாட்டேன் அர்ஷுமா. மரணத்திற்கு மட்டும் தான் அந்த ஷக்தி உண்டு’ அவன் குரலில் இருந்த உறுதி கண்டு பூரித்துப் போனாள் வர்ஷினி.
‘இதை விட வேறென்ன எனக்கு வேண்டும்’ அவன் தோள்களில் தலை சாய்த்துக் கொண்டாள்.
அந்த சூழ்நிலையை சற்று இலகுவாக்க எண்ணினான் கணேஷ் ராம்.
‘அப்புறம் மிசஸ் ராம். உங்க இதயம் திருடு போயிருச்சாமே. ட்ரீட்மன்ட்க்கு வந்தீங்க போல’ இப்போது அவன் குரலில் குறும்பு கொப்பளித்தது.
‘ஆமா என்ன பண்றது திருடியவன் கிட்டேயே வந்து என்னோட பொருளை திரும்ப குடுன்னு கேட்க அப்பாயின்ட்மன்ட் எல்லாம் வாங்க வேண்டியது இருக்கு’ அலுத்துக் கொள்வதைப் போல சொன்னாள்.
‘ஹஹ்ஹா பாவம் லிசி ரொம்ப கலவரம் ஆகிட்டா’
‘அப்புறம் டாக்டர். உங்க பேஷண்டை இப்படித் தான் நீங்க ட்ரீட் செய்வீங்களோ’ அவனது இறுகிய பிடியை சுட்டிக் காட்டியபடியே கேலியாய் வினவினாள்.
‘அர்ஷு’ அவளது முகத்தைக் கையில் ஏந்திக் கொண்டான்.
‘விளையாட்டுக்குக் கூட நீ பேஷன்ட்ன்னு சொல்லாதே. அதுவும் என் பேஷண்ட்ன்னு...நோ என்னால தாங்கிக்க முடியாது. என் செல்லக்குட்டி நூறு வருஷம் ஆயிரம் வருஷம் ஆரோக்யமாக இருக்கணும்’
எத்தனையோ இதய அறுவை சிகிச்சைகளை அனாசியமாக செய்பவன், பல நோயாளிகளை தினம் தினம் சந்தித்து சிகிச்சை அளிப்பவன் ஒரு சொல்லை தாங்க இயலாது உணர்ச்சிவசப்பட்டான்.
வர்ஷினியோ இப்போது அவன் சொன்னதில் ஒரு புறம் அகமகிழ்ந்து போனாலும் இன்னொரு புறம் கலவரமானாள். அவளுடைய உடல் நிலை பற்றிய பயம் அவளைத் தொற்றிக் கொண்டது. ஆனாலும் தனக்குத் தானே தைரியமூட்டிக் கொண்டாள்.
‘அதான் வருண் அண்ணா நான் நார்மல் ஆகிட்டேன்னு சொல்லிட்டானே’ சமாதானம் செய்து கொண்டவள் ராமை கலகலப்பாக்கும் முயற்சியில் ஈடுபட்டாள்.
நேரம் போவதே தெரியாமல் ஏதேதோ பேசிக் கொண்டே இருந்தனர்.
‘நீ சின்ன வயசில் எப்படி இருந்திருப்ப அர்ஷுமா. துருதுருன்னு எப்போ பாரு சேட்டை செய்துட்டே இருந்திருப்ப அப்படித் தானே’ அவளை சிறு பெண்ணாய் கற்பனை செய்து பார்த்தான்.
‘அதெப்படி நேரில் பார்த்தது போல கரெக்டா சொல்றீங்க ராம்’ ஆச்சரியமாய் கேட்டாள்.
‘இது வரை இப்படி ஒரு எண்ணம் எனக்கு தோன்றியதே இல்லை. ஆனா இப்போ இந்த நிமிஷம் என் குட்டி அர்ஷுவை என் கையில் ஏந்தி கொஞ்சணும் போல ஆசையாக இருக்கு’
அவன் அவ்வாறு சொல்லவும் நாணம் வந்து நங்கையை முழுவதுமாய் ஆட்கொண்டது.
‘என் பாட்டி முன்னே ஒரு தரம் சொல்லிருக்காங்க. கணவனுக்கு மனைவி மேல பிரியம் அதிகமா இருந்தா அவங்களுக்கு அந்த பெண்ணின் சாயல்ல குட்டி பொண்ணு பிறப்பாளாம். அதே மனைவிக்கு கணவன் மேல அன்பு அதிகமா இருந்தா அப்பா சாயல் மகளுக்கு இருக்குமாம்’ ராம் சொல்லிக் கொண்டே போக சட்டென வர்ஷினியின் முகம் இருண்டு போனது.
‘அர்ஷுமா’ ராமின் அழைப்பில் கலைந்தவள்
‘பாருடா வேர்ல்ட் பேமஸ் டாக்டர் சொல்றாரு. மகா ஜனங்களே நல்லா கேட்டுக்கோங்க’ விரைவில் அவளது உணர்வுகளை மறைத்து அவனை சீண்டிக் கொண்டிருந்தாள்.
‘இங்க ஏன் இப்போ மகா ஜனங்களை கூப்பிடுற. அப்புறம் உன் வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறிடும்’ கணேஷும் அவளுக்கு சரிசமமாய் வம்பிழுத்தான்.
‘என்ன வண்டவாளம் பண்ணினோம்’
‘இப்போ இங்க யாராச்சும் நம்மை பார்த்தா’
‘பார்த்தா’
‘பார்த்தா என்ன நினைப்பாங்க’
‘மிஸ்டர் அண்ட் மிசஸ் ராம்ன்னு நினைப்பாங்க’
‘அப்போ மிஸ் ராம் எப்போ வருவாங்க’ உல்லசமாய் விசிலடித்தான்.
‘உங்களுக்கு ரொம்ப கொழுப்பு ஏறிப் போச்சு’ சட்டென அவனிடம் இருந்து விலகி அமர்ந்தாள்.