இப்படியே கலாய்த்துக்கொண்டிருக்கும் போது, மதனின் கவனம் மாணவிகளின் புறம் திரும்பியது. அவன் அடிக்கடி சைட் அடிப்பான் தான்...எல்லாம் பார்வையோடு நின்ற போதிலும் ஒரு பெண்ணின் நினைவு அவனை டிஸ்டர்ப் செய்தது என்னவோ நிஜம்..அவள் பெயர் மாயா..மதனும் அவளும் நல்ல நண்பர்கள்..சில கடினமான கணக்குகளுக்கும் அவளிடம் தீர்வு இருக்கும்.எல்லோரிடமும் இயல்பாகப் பழகுபவள்...அவளிருக்கும் இடத்தில் கலகலப்பிற்கு பஞ்சமிருக்காது. எனவே, அவளின் அறிவின் பால் ஏற்பட்ட ஈர்ப்பில் கவனிக்கத் தொடங்கி, இப்போது அவள் நடை, உடை, பாவனை அனைத்துமே அவனைக் கட்டி இழுப்பது போல் தோன்றியது. இத்தனைக்கும் மதனிடம் மாயா சகஜமாகவே பேசுவாள்.
ஆயிற்று...மூன்று ஆண்டுகள் இளநிலைக்கல்வி முடிவு பெரும் நேரம்..மதனின் நண்பன் வினோத்திற்கு மட்டும் மதனின் மாறுபட்ட பார்வை தெரியும்..கிட்டத்தட்ட இரண்டாம் ஆண்டிலிருந்து மதனின் காதல் ஆரம்பமாகி இன்று காதல் தான் என்றுஉறுதியடைந்தும், வெளிப்படுத்தப்படாக்காதலாக இருக்கிறது.
நாளை பேர்வெல் பார்ட்டி.யன்று சொல்லிவிட முடிவு செய்திருந்தான் மதன்..சொல்லவும் செய்தான்..ஆனால்? அவளிடமிருந்து புன்னகையைத் தவிர வேறு ஒன்றும் இல்லை..அத்தோடு செமெஸ்டர் ஆரம்பிக்கவே அதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டும் விட்டான். ஏனெனில் அதே கல்லூரியில் முதுநிலைக் கல்விக்கு அவர்கள் இருவருமே விண்ணப்பித்திருந்தனர்.
அடுத்த கல்வியாண்டும் ஆரம்பித்தது..மீண்டும் மதன் முயல, அவளோ ஒத்துவராது வேண்டாம் என்று மறுத்து விட்டாள். ஆனால் ஒரேயடியாக ஒதுங்க வில்லை. நட்பு மட்டும் தொடர்ந்தது. மதனை மறுக்கக் காரணம் இல்லையே என்று அவனோடு சேர்ந்து அவனின் நண்பர்களும் குழம்பியது தான் மிச்சம். என்ன மதன் கொஞ்சம் புஸ்புஸ்’ என்று இருப்பான். மற்றபடி அன்பிலோ அறிவிலோ குறைந்தவன் அல்ல..மாயாவிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இப்படியே படிப்பும் முடிந்து அவரவர் வேலையிலும் அமர்ந்தனர்.
கிட்டத்தட்ட எட்டு வருடக் காதல் மதனுடையது. மதனுக்கு பெண் பார்க்கத் தொடங்கியதுமே, மாயா சம்மதம் இல்லாத போதும், அவளை எப்படியாவது மணமுடிக்க வேண்டும் என்று வீட்டிலும் சொல்லிவிட்டான்.
ஜாதி, அந்தஸ்து என்று பல தடைகள்..அம்மா அப்பா உறவினர்கள் எல்லோருக்கும் இவனது காதல் தெரிந்து ஒரே அட்வைஸ் மழை..ஆனாலும் இவன் ஒரே பிடியில் நின்றான். கடைசியில் மதனின் அப்பா வீட்டிற்கு ஒரே பிள்ளை என்பதால் அரைமனதாக சம்மதமும் சொல்லி விட்டார். ஆனால் சம்மதிக்க வேண்டியவளோ, எந்த பதிலும் சொல்ல வில்லை. விருப்பமா இல்லையா என்பதைக்கூட சொல்லாமல் அழுத்தமாக இருந்தாள் மாயா. இறுதியில், நண்பர்கள் எல்லோருமே மதனைத்திட்டத் தொடங்கினார்கள்.
“ஏண்டா டேய், அவள் தான் சம்மதம் சொல்லலல்ல,,ஒண்ணா ரெண்டா...எத்தனை வருஷம் காத்திருக்கறது..காரணமும் சொல்ல மாட்டேங்கறா.. பேசாம அம்மா அப்பா சொல்ற பொண்ணைக் கட்டிக்கிட்டு சந்தோஷமா இருக்கப்பாரு” என்று ஆலோசனைகள் தொடர்ந்தது.
பெண் பார்க்கத் தொடங்கினார்கள் பெற்றோர்..மதனால் எதுவும் சொல்ல முடியவில்லை. இறுதியாக ஒருமுறை முயற்சி செய்யலாம் என்று போன் செய்து, பெண் பார்க்கும் விஷயத்தைச் சொல்லி அவள் பதிலைக்கேட்க முகத்திலறைந்தாற்போல், எனக்கு விருப்பமில்லை என்று சொல்லிவிட்டாள் மாயா. உடைந்து போனான் மதன்.
காரணமே தெரியாமல் ஒருவரின் வெறுப்பு யாரையுமே பாதிக்குமே..மதன் மட்டும் பெரிய ஞானியா என்ன..உள்ளுக்குள் நொறுங்கியவன், நம் விருப்பம் நிறைவேறா விட்டாலும் பெற்றவர்கள் விருப்பமாவது நிறைவேறட்டும் என்று திருமணத்திற்கு சம்மதித்தான்.
“கிறீச்” என்ற சத்தத்துடன் வண்டி சடக்கென்று நிற்க, முன்புறம் லேசாக இடித்துக்கொண்டு நிமிர்ந்தான் மதன்.
தலையை தேய்த்துக்கொண்டே,”டேய்..வெங்கட் பார்த்து ஓட்ட மாட்டியா? என்று எரிச்சலான குரலில் கேட்டான். பதில் வராமல் போகவே, அவன் புறம் திரும்ப, பேயறைந்தாற்போல் அமர்ந்திருந்தான் வெங்கட்.
“என்னடா.என்ன ஆச்சு என்று அவனை உலுக்க, தலையைக் குலுக்கிக் கொண்டு நிமிர்ந்து “ஆங்...என்ன கேட்ட...”
“என்ன கேட்டனா..என்ன ஆச்சுனு கேட்டேன்”
“ம்ம் குழந்தை அழுதது..”
“அட ச்சை.. இந்த புத்தி உன்னை விட்டுப் போகாதாடா..ஏண்டா சடன் ப்ரேக் போட்ட..இங்க பாருடா நெத்தில எப்படி அடிபட்டுருக்குன்னு..”மதன் கத்தினான்
“சாரிடா மச்சான்..நிஜமாவே குழந்தைடா..ரோட்டுக்கு குறுக்க ஓடி வந்திட்டுடா..அங்க பாரு” என கை காட்ட , அங்கே ஒரு தாய் குழந்தையை அள்ளிக்கொண்டு நிற்கும் காட்சி தென்பட்டது.
“வெளியே தலை நீட்டிய வெங்கட், ஏம்மா, இப்படிப் பண்ணறீங்களேம்மா... ஒரு நிமிஷத்துல குழந்தை என்ன ஆகியிருக்கும்னு தெரியுமா ? என்று சொல்ல, அந்தப்பெண் வார்த்தை வராமல் குழந்தையை அணைத்தபடி நின்று கொண்டிருந்தாள். கை தானாக வணங்கியது.