வெளியில் ஏதோ வண்டி வரும் சத்தம் கேட்டு எட்டிப்பார்த்த மதன் வெங்கட் இல்லை எனத் தெரிந்து, மீண்டும் தன் நினைவுப் பெட்டகத்தை ஒவ்வொன்றாய் திறக்கத் தொடங்கினான்.
அன்று மதனின் பிறந்த நாள்..அவனுக்கு வயது முப்பது பிறக்கப் போகிறது.
தியாவைப் பொருத்த வரையில் அவளுக்கு மிகவும் பிரியமானவர்களுக்கு, அவள் கைகளினால் செய்த பொருட்களைப் பரிசாக வழங்குவது தான் பழக்கம். எனவே, தன் கணவனைச் சந்தித்தது இருபதுகளில்...விடிந்தால் அடுத்த எண்ணிக்கைத் தொடங்கி விடும். எனவே இதை ஸ்பெஷலாகக் கொண்டாட ஆசைப்பட்டாள் தியா
கிட்டத்தட்ட ஆறு மாதமாக, ஒவ்வொன்றாய் யோசித்து இருபத்து ஒன்பது பரிசுகள்..அனைத்துமே கையினால் செய்யப்பட்ட பரிசுகள்..ஒவ்வொன்றும் ஒரு விதம்..மதனுக்குப் பிடித்த கலர்களில், பிடித்த விஷயங்கள் சம்பந்தப் பட்டதாகவே அனைத்தும் இருந்தது.
ஒவ்வொன்றாய் அவள் கொடுக்க, மதனுக்கே பொருக்கவில்லை..இன்னும் எத்தனை தான் இருக்கிறது என்று வாய் விட்டே கேட்டவன், அடுத்த பரிசு கொஞ்சம் சிம்பிளாகத் தோன்றவே, “இதென்ன தியா, பென்சில் ஓவியமா...ரொம்ப லைட் டா இருக்கே..” என்றான்
அழகான கண்களை உருட்டிக்கொண்டு...”ம்ம்..இதைச் செய்ய தான் நான் ரொம்பவே கஷ்டப்பட்டேன்..கண்டுபிடிங்களேன்” என,
கூர்ந்து பார்த்த மதனின் முகத்தில் வியப்பு, ஆச்சர்யம், மகிழ்ச்சி என கலவையான உணர்வுகள் வர, அதைத் தன் மனதில் படமெடுத்துக் கொண்டாள் தியா.
அதில் இருந்தது மதனின் பெயரும் பிறந்த தேதியும் மட்டுமே..ஆனால் அது தியாவின் முடி கொண்டு எழுதப்பட்டு இருந்தது.
பேச்சே வராமல் மௌனமாக அவளைப் பார்த்தான் மதன்.
புருவங்களை ஏற்றி இறக்கி, அவனைப் பார்த்த தியா, “எப்படிஇருக்கு...பிடிக்குதா “ என ரகசியக் குரலில் கேட்க,
மதனோ, அதே குரலில் “ரொம்பப்பிடிக்குது..செஞ்ச ஆளை ரொம்ப ரொம்பப் பிடிக்குது” என, வெட்கத்தோடு அடுத்த பரிசை நீட்டினாள்..அது ஒரு கவிதை..
உயிருக்குக் கூட உருவம் இருப்பதை உணர்ந்தேன்
உயிராக உன்னைப் பார்ப்பதால் தெளிந்தேன்
தலையை உலுக்கி, தியாவின் நினைவுகளில் விடுபட்டவன், தாகம் எடுக்கவே தண்ணீர் குடித்து விட்டு மீண்டும் அதே இடத்திற்கு வந்து அமர்ந்தான்.
அவனைக் கேளாமலே நினைவுகள் தொடர்ந்தன..
இப்படித்தான் தியாவின் அன்பு அவனைத் திணறடிக்கத் தொடங்கியது. அவள் எதற்கும் அடம் பிடிப்பதில்லை..ஆசைப் படுவதில்லை..அவள் கேட்பதெல்லாம் ஒன்று தான்..அவளோடு அவன் நேரம் செலவளிக்க வேண்டும். அது ஒன்று தான் அவளுக்குப் பிடித்த விஷயம். அவன் காலருகில் அமர்ந்து லேசாக அவன் காலில் சாய்ந்து கொண்டு பேசுவதோ, டி வி பார்ப்பதும் அவளுக்குப் பிடித்தம். ஆனால் அதற்கெல்லாம் நேரம் மதனிடம் இல்லை. அங்கு தான் பிரச்சினை ஆரம்பம்.
ஆனாலும் அவள் தன எதிர்ப்பைக் காட்டுவது என்னவோ மௌனம்..அதிகப்படியாக அழுகை அவ்வளவுதான். வேறு கத்தி கூப்பாடு போடுவதெல்லாம் கிடையாது.
இப்படிதான் ஒருமுறை சண்டை வந்த போது மதன் பேசாமல் படுத்து விட தியாவோ அழுது தீர்த்தாள். இடையில் விழித்துப் பார்த்த மதன்,இவள் அழுது கொண்டிருப்பதைப் பார்த்து திடுக்கிட்டு,”ஏய் தியா, என்ன ஏன் அழற..:” என, அவளோ “நீங்க பாட்டுக்கு சமாதானம் ஆகாமலே படுத்திட்டீங்க...எனக்கு சண்டை போட்டா தூங்க முடியாது” என கேவிக்கேவி அழ, மதனுக்கு சிரிக்கவா அழவா எனத் தோன்ற,இறுதியில் சமாதானம் பேசி தூங்கினார்கள்.
அதிலிருந்து உஷாராக இருப்பான் மதன். அப்படியே மறந்தாலும் தியா உலுக்கி எழுப்பி பழம் விட்டுவிட்டுத் தான் மறு வேலை.
ஒரு முறை தியா கேட்டாள்..எப்பவுமே சண்டை வந்தால் நான் தான் முதலில் பேசுறேன்..உங்களுக்குத் தோணாதா?
“அப்படில்லாம் ஒன்னும் இல்லை..எனக்கு ஒரு மணி நேரம் கழித்து தோணும் பேசிரலாம்னு...ஆனா அது உனக்கு ஒரு நிமிஷத்துல தோணிடுது..நான் என்ன பண்ணறது சொல்லு” என்பான் மதன்.
வெவ்வே என்று அழகு காட்டி விட்டு சென்று விடுவாள் தியா
இப்போது அதை நினைத்து சிரித்துக்கொண்டான் மதன். இந்த முறையும் சிறு பிரச்சனைதான்..ஆனால் இப்போது வரை தியா பேச வில்லை..மதனின் மனம் வலித்தது..ஏன் இப்படி இருக்கிறாள்..தான் செய்தது தவறா என்று யோசித்தான்.
வேறு ஒன்றுமில்லை..வேலை நிமித்தமாகப் பார்ட்டியில் குடும்பமாகக் கோவையில் ஒரு சந்திப்பு..அதற்கு தன் மனைவி குழந்தையை அழைத்துச் செல்ல மதனுக்கு விருப்பம். ஆனால், ஊரிலிருந்து வந்ததுமே குடும்பத்தில் ஒரு குல தெய்வ வழிபாடும் இருந்தது. எனவே, கைக்குழந்தையை வைத்துக்கொண்டு இரண்டிலும் கலந்து கொள்வது இயலாது எனபது தியாவின் வாதம். ஆனால் மதன் ரெண்டுமே முக்கியம்..என்று கூறி விட்டான். இறுதியில் அவன் தான் வெல்லவும் செய்தான்.
குடும்ப விழா முடிந்ததும் சென்னை வந்துவிட்டான் மதன். தியாவின் உடல்நிலை சற்று சரியில்ல அலைந்ததால்.. அதைச் சுட்டிக்காட்டியதில் மதனுக்குக் கோபம் வந்து கத்தி விட்டான். இவ்வளவு தான் விஷயம்