”என்னை ஏன் அதட்டறீங்க மாமா, அவளை பாருங்க தான் வசமா மாட்டிக்கிட்டோம்னு பயந்து தப்பிக்கறதுக்காக உங்களை அண்ணான்னு கூப்பிடறா, இத்தனை நாளும் அவளை உங்க வலையில வைச்சிருந்தா, அதை நான் கண்டுபிடிச்சதும் அப்படியே டாப்பிக்கை மாத்தி பேசறா”
”ஆனந்த் இதோட நிறுத்திக்க, அவளை யார்ன்னு நினைச்ச என்னோட ஒண்ணுவிட்ட சித்தி பொண்ணு என் தங்கச்சி” என உரக்கச் சொன்னதும் ஆனந்தின் இதயம் ஒரு நொடி நின்று பின் துடித்தது
”தங்கச்சியா” என அவன் அதிர்ச்சியுடன் கேட்க
”ஆமாம் என் சித்தி பொண்ணு படிச்சிட்டு வேலை தேடிக்கிட்டு இருந்தா, அந்நேரம் பார்த்து நீயும் ஆபீசை என்கிட்ட விட்டுட்டு படிக்க போயிட்ட, பாவம் ரோஜா அவளுக்கு பணக்கஷ்டம் இருந்தது, அவளுக்கும் மேல படிக்கனும்னு ஆசை, என்ன செய்றது வேலைக்கு போக வேண்டிய கட்டாயம் அவளுக்கு, அவளோட அப்பா அம்மா இறந்துட்டாங்க, தாத்தா, பாட்டி, பெரியப்பா, மாமான்னு சொந்தங்கள் இருந்தாலும் அவளுக்கு என்னிக்குமே துணையா அண்ணனா இருந்தது நான்தான்
இந்த ஆபீஸ்ல நிறைய குளறுபடிகள் இருந்தது, என்னால அதையெல்லாம் கண்டுபிடிக்க முடியலை, எவன் நல்லவன் எவன் கெட்டவன்னு தெரியலை, யாராவது எனக்கு உதவினா நல்லாயிருக்கும்னு யோசிச்சேன், இங்க இருக்கறவங்களை என்னால நம்ப முடியலை, யாரும் மத்தவங்களை காட்டிக்கொடுக்க முன் வரலை, அதனால ரோஜாகிட்ட அந்த பொறுப்பை ஒப்படைச்சேன்.
என் தங்கச்சின்னு நீ காட்டிக்க வேணாம் இங்க நடக்கற குளறுபடிகளை எனக்கு கண்டுபிடிச்சி சொன்னா போதும்னு சொன்னேன். அவளும் நான் சொன்ன வேலையை இன்னிக்கு வரைக்கும் செய்துக்கிட்டு வர்றா, அவள் சொல்ற தகவலால இந்த ஆபீசை நஷ்டத்தில இருந்து காப்பாத்தியிருக்கேன், துரோகிகளை விரட்டியிருக்கேன், அவளால எவ்வளவு நல்லது நடந்திருக்கு தெரியுமா