“வாய்விட்டு அவர் சொல்லலையே தவிர, அவரோட சரிபாதி நான் இல்லைன்னு யார் சொன்னாலும் அவரே அதை ஏத்துக்கமாட்டார்…. நீ வேணும்னா சொல்லிப்பாரேன் அவர்கிட்ட… சதி உங்களுக்கு ஏத்தவ இல்லன்னு…”
தைஜூ யோசனையில் மூழ்க, அவளின் கைப்பிடித்துக்கொண்ட சதி,
“என்னைக்கு இருந்தாலும் உன் அண்ணன் கைப்பிடிக்கப் போறது என்னைத்தான்… அதனால நீ தேவை இல்லாம கவலைப்படுறதை நிறுத்திட்டு இஷானோட காதலியா, வருங்கால மனைவியா இருக்குற இந்த நிமிஷத்தை வாழப்பாரு… எனக்கு அவர் எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி என் அண்ணனும், என் அண்ணனோட இந்த செல்ல தைஜூவும் முக்கியம்… புரியுதா?...” எனக் கேட்க, தைஜூ அவளை அணைத்துக்கொண்டாள்…
தன் சந்தோஷத்தினை தியாகம் செய்து வாழ நினைக்கும் தோழியின் தோழமை சதியின் கண்களில் தானாகவே நீரை வரவழைத்தது…
தைஜூவின் முதுகினை பரிவுடன் வருடிக்கொடுத்து,
“இஷானோட நூறு வருஷம் என் தைஜூ சேர்ந்து சந்தோஷமா வாழணும் ஈஸ்வரா…” என மனமார வேண்டிக்கொண்டவள் தன் விழிநீர் வழிந்த தடம் தெரியாமல் துடைத்துவிட்டு, தைஜூவை இஷானிடம் பேச சொல்லி அனுப்பினாள்…
இஷானைத் தேடிச் சென்ற தைஜூ, அவன் ஒரு மரத்தின் அருகே நின்று கொண்டிருப்பதை பார்த்துவிட்டு அவனருகில் சென்றாள்…
அவள் வந்த அரவம் கேட்டு திரும்பி பார்த்தவனிடம்,
“கோபமா?...” எனக் கேட்டாள் அவள்…
“………….”
“என் மேல கோபமா இருக்குறீங்களா?...”
மீண்டும் அவள் அழுத்தி கேட்க,
“ஆமா………..” என்றான் அவன்…
“சாரி……” என சொல்ல வந்தவளை தடுத்தவன்,
“நீ எதுவுமே சொல்ல வேண்டாம்டா… என்னால உன்னை, உன் உணர்வை புரிஞ்சிக்க முடியும்… பேசமாட்டேன்னு அப்ப நீ சொன்னப்ப கூட உன்மேல எனக்கு எந்த கோபமும் வரலை… ஆனா சதிகிட்ட நீ இப்போ பேசிட்டிருந்ததை நான் கேட்டபின்னாடி என்மேல எனக்கே கோபம் வருது…” என்றதும் சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தாள் தைஜூ…
“வித் யுவர் பர்மிஷன்….” என்றபடி அவளை நெருங்கியவன், அவள் இரு கன்னங்களையும் பிடித்து, நெற்றியில் லேசாக இதழ் பதித்து விலகி,
“சதியை அவசரமா நான் போக சொன்னதை நீ எப்படி எடுத்துகிட்டன்னு தெரியலை… உங்கிட்ட பேசுறதுக்காக அவளை நான் துரத்தி விட முயற்சி பண்ணேன்னு நீ நினைச்சிருந்தாலும் தப்பில்லை… அங்க அவளுக்காக ஒரு பூ காத்திட்டிருக்குன்னு சொன்னேனே நினைவிருக்கா?... அங்க நிஜமா அவளுக்கு பிடிச்ச பூவும் பூத்திருக்கு… பக்கத்துலயே அதை ரசிச்சிட்டிருக்குற ஜெய்யும் இருக்குறான்…. காலையிலயே அவ ஜெய்யைப் பார்க்கத்தான் வந்தா… அவ அதை சொல்லலைன்னாலும் என்னால புரிஞ்சிக்க முடிஞ்சது… அது மட்டும் இல்லாம நான் இப்போ வரும்போது என்னைப் பார்த்துட்டு என் பின்னாடி அவ கண்ணு போனதையும் நான் உணராம இல்லை… அதனால தான் அவளை போக சொல்லி அவசரப்படுத்தினேன்… அதுக்காக உங்கிட்ட பேச ஆசை இல்லன்னு பொய் சொல்லமாட்டேன்… கிடைக்குற கொஞ்ச நேரத்துல உங்கிட்ட இரண்டு வார்த்தை பேச மனசு ஏங்கும்… உன் மனசுல என்ன இருக்குன்னு இப்போ நானும் புரிஞ்சிகிட்டேன்…. என்னை நேசிக்குற அளவுக்கு என் தங்கையையும் நேசிக்குற… நிஜமாவே நான் குடுத்து வச்சவன் தான்…” என்று சொல்லிமுடித்ததும்,
பட்டென அவனை அணைத்துக்கொண்டாள் தைஜூ…
“தைஜூ….. என்னாச்சு?... ஹேய்… இங்க பாரு….” என தன்னை அணைத்துக்கொண்டவளை விலக்க அவன் முயற்சிக்க, அவள் அசையவே இல்லை…
“ஹேய்… தைஜூம்மா… என்னடா?....”
“கிடைக்குற கொஞ்ச நேரத்துல உங்ககிட்ட இரண்டு வார்த்தை பேச மனசு ஏங்கும்… உங்க மனசுல என்ன இருக்குன்னு இப்போ நானும் புரிஞ்சிகிட்டேன்… என்னை நேசிக்குற அளவுக்கு என் அண்ணனையும் நேசிக்குறீங்க… நிஜமாவே நானும் குடுத்து வச்சவ தான்….”
சொல்லியவள் மீண்டும் அவனை அணைத்துக்கொள்ள, இம்முறை புன்னகையுடன் அவளை சுற்றி வளைத்திருந்தது அவனது கரங்கள்…
“தைஜூ……”
“ம்ம்ம்……”
“இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே இருந்தா, நான் நானா இருக்கமாட்டேன்… அதனால போகலாம்… வா…”
அவன் சொன்னதற்கு எந்த பதிலும் சொல்லாது அவனது நெஞ்சோடு ஒன்றிக்கொண்டிருந்தாள் அவள்…
“ப்ளீஸ்டா… சொன்னாக்கேளு…. வா போகலாம்… அப்புறம் நிலைமை என் கை மீறி போயிடும்டி….”
அவன் தவிப்புடன் சொல்ல,
“போகட்டும்…” என்றாள் அவள் ஒற்றை வார்த்தையில்…
“தைஜூ………………………………..” என ராகம் பாடிக்கொண்டே அவன் அவளின் முகம் நிமிர்த்த, அவளும் அவனைப் பார்த்தாள்…
அவன் விழிகளோ அவளை அழைக்க, அவளோ வெட்கத்துடன் இறுக விழி மூடிக்கொண்டாள்….
அதற்கு மேலும் தாமதிக்காது, குனிந்து அவள் இதழோடு இதழ் சேர்த்தணைத்துக்கொண்டான் இஷான், காதலோடு…..