“தட்சா… அவங்க மூணு பேரும் போயிட்டு வரட்டும்… நாம கீழ இருக்கலாம்…”
தகப்பனின் பேச்சை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசாமல், சரி என்றார் தட்சேஷ்வரும்…
“நீ போறதுல எனக்கு விருப்பமே இல்லை… வர வர ரொம்ப பிடிவாதம் பிடிக்குற சதி நீ… இதெல்லாம் எங்க கொண்டு போய் விடப்போகுதோ?.. தெரியலை…”
பிரசுதி புலம்ப, காதம்பரி அவரை சமாதானப்படுத்தி, அழைத்துச்சென்றார்…
சோமநாதன், ஜெய்யின் அருகில் வந்து, “பார்த்துப்பா… ஜாக்கிரதையா போயிட்டு வாங்க…” என்றதும்,
“அதெல்லாம் அவங்க போயிட்டு வந்துடுவாங்க… நீங்க கவலைப்படாம வாங்க…” என சிதம்பரம் கூற,
“ஆமா சோமு நீ வா… நாமளும் அவங்க வயசில இந்த மலைக்குப் போகலையா என்ன?... பயப்படும்படி எதும் இல்லன்னு தெரிஞ்ச பின்னாடி தான் அவங்க அங்க போறதுக்கே நான் சம்மதிச்சேன்… அதனால நீ கவலைப்படாம வா…”
என தட்சேஷ்வரும் தன் நண்பனுக்கு எடுத்துச் சொல்ல, சோமநாதனும் புன்னகைத்தபடி அவர்கள் இருவருடனும் அகன்றார்…
“இஷான்… பார்த்து ஜாக்கிரதையா போயிட்டு வாங்க…”
“தைஜூ பயப்படாதடா… அங்க பாரு எவ்வளவு பேர் அந்த உச்சிக்குப் போறாங்கன்னு…”
அவன் கைகாட்ட, அந்த திசையில் நிறைய பேர் மலை உச்சிக்கு சென்று கொண்டிருந்தனர்…
“சதி… உன் அண்ணனையும், என் அண்ணனையும் விட்டு நீ எங்கயும் நகரக்கூடாது சரியா?... மலை மேல உன் குரங்கு சேட்டை எல்லாம் செய்யாம அமைதியா இருக்கணும்… என்ன புரியுதா?...”
தோழியின் தலை வருடியபடி தைஜூ பேச, சதி சிரித்தாள்…
“வர வர நீ எனக்கு ஃப்ரெண்டா இல்ல அம்மாவான்னு டவுட்டா இருக்குடி…”
“வாய்ப்பேசாத… அடிவாங்குவ எங்கிட்ட… சீக்கிரம் போயிட்டு சீக்கிரம் வந்துடு… சொன்னது நினைவிருக்கட்டும்…”
“சரிங்க தைஜூ அன்னையே… விடை கொடுங்கள் எனக்கு…”
இடைவரை குனிந்து சதி வணங்க, இஷான் அவளின் காதை பிடித்து திருகி இழுத்துப்போக, தைஜூ சிரித்தபடியே அவளுக்கு டாட்டா காட்டினாள்…
“ஜெய் அண்ணா…. போயிட்டு சீக்கிரம் வாங்க… ஓகேயா?...”
“தைஜூ, நாங்க என்ன போருக்கா போறோம்… நீ பயப்படாதம்மா… சரியா?...”
“சரி…” என்றவளுக்கும் மனதிற்கு என்னவோ போல் இருக்க, ஜெய்யிடம் சிரித்து புன்னகைத்தாள்…
“சரி இஷான்… நேரமாச்சு… கிளம்புங்க…”
பிரம்மரிஷி கூற, இஷான் சரி என்றபடி சதியின் அருகே சென்று நின்றான்…
இஷானை நோக்கி செல்ல இருந்த ஜெய்யைத் தடுத்தவர்,
“எதுவா இருந்தாலும் நம்பிக்கையை மட்டும் கைவிட்டுடாத… சதி உனைச்சேரப்பிறந்தவள்… அவளுக்காக ஜனனமெடுத்தவன் தான் நீயும்…”
அவர் சொல்வதின் அர்த்தம் என்ன என யோசிக்க ஆரம்பித்தவனை அதற்கும் மேல் யோசிக்க விடாது இஷான் அழைத்திட, ஜெய் பிரம்மரிஷியைப் பார்த்தான்…. அவரோ மெதுவாக கண் மூடி இமைக்க,
மலை மேல் ஏற இருந்த இஷானின் முன் வந்து நின்ற ஜெய்,
“நான் முன்னாடி போறேன்… எனக்கடுத்து சதியும், அவளுக்கு அடுத்து நீயும் வா…” என்று கூற,
“ஏண்டா?...” என கேள்வி கேட்டான் இஷான்…
“போற பாதை எப்படி இருக்கும்னு தெரியலை… ஏறும்போது வழுக்கினாலும் நீ அவங்க பின்னாடி இருந்தா அவங்களுக்கு ஹெல்ப் பண்ணிடலாம்… அதான்…”
“அது சரி தான்… பட் வழுக்குறதுக்கு அவ சரிவு பகுதியில கால் வச்சா தான அவளுக்கு என்னோட ஹெல்ப் வேணும்?... அவளை, ஐ மீன் எங்களை நீ கூட்டிட்டு போற பாதையில முதல்ல போகப்போறது நீயா இருக்குற பட்சத்துல, உச்சிக்குப் போறவரை பாதையில எந்த பிரச்சினையும் வராதுன்னும் எனக்கு தெரியும்டா மச்சான்…”
இஷான் ஜெய்யைப் பற்றி அறிந்தவனாய் கூற, ஜெய் மேற்கொண்டு எதுவும் பேசாமல் நடக்க ஆரம்பிக்க, சதி அவனின் பின்னேயே நடந்தாள்…
அவன் தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனமாக அழுத்தமாக எடுத்து வைக்க, அவன் பதித்து வைத்த பாத தடத்தில் தனது பாதம் வைத்து அவனை ரசித்தபடியே அவனின் பின்னே நடந்து சென்றாள் சதியும்…
விரைந்து மூவரும் உச்சிக்கும் வந்துவிட, சதிக்கு இவ்வளவு சீக்கிரம் இந்த பயணம் முடிந்திருக்க வேண்டாமென தோன்றிய மாத்திரத்தில் முகத்தில் பொலிவு கொஞ்சம் குறைய ஆரம்பிக்க,
“என்னாச்சுடா சதி?... டயர்டா இருக்கா?...” என்றான் பரிவுடன் இஷான்…
“லேசா குளிருது… வேற ஒன்னும் இல்லண்ணா…” என்றாள் இரு கைகளையும் பரபரவென தேய்த்துக்கொண்டே…
“குட்டிச்சாத்தான்… கீழ வச்சே சொல்லியிருந்தா நான் என் ஜாக்கெட் கோட்டை தைஜூகிட்ட கொடுத்துட்டு வந்துருக்க மாட்டேன்ல…”
“இப்போ அதனால என்ன இஷான்?... கொஞ்ச நேரம் குளிரும்.. அப்புறம் குளிர் தெரியாது… நீ வா… பூவைப்பார்க்க போகலாம்…”
“வாலு… வாலு…” என திட்டிக்கொண்டே அவளின் பின்னே அவன் செல்ல,
சதி எதிர்பார்த்து வந்த அந்த பூக்களும் அவளது கண்ணுக்கு காட்சியளித்தது விருந்தென…