பல அடி தூரம் உருண்டவனின் பின்னேயே அவளும் உருண்டு வந்து கொண்டிருக்க, ஜெய் லேசாக உயர்ந்து படர்ந்திருந்த ஒரு சிறிய பாறையின் மீது மோதி நிற்க, அவனைத்தொடர்ந்து சதியும் வந்தபோது, சரியாக அவளின் கரத்தினைப் பிடித்து நிறுத்தி அவளைக் காப்பாற்றிய ஜெய்,
“இஷான்………….” என கத்த,
இஷான் வேகமாக அந்த மலைப்பகுதியில் கால்வைத்து அவர்களை நோக்கி ஓடிவந்து கொண்டிருந்தான் கவனமாக…
“பார்த்துவா… இஷான்… எங்களுக்கு ஒன்னும் இல்லை… மெதுவா வா…” என ஜெய் சொன்னபோது, ஜெய் பிடித்திருந்த அந்த பாறை அவன் பிடியிலிருந்து நழுவ இருப்பதை அறிந்தான்…
ஒரு கையில் பிடிப்பிற்காக பாறையையும், இன்னொரு கையில் சதியின் கரத்தினையும் பிடித்து, அவளைத் தூக்கிவிட அவன் முனைய, இஷானும் வந்தான்…
“பிடி… தூக்கு….” என்ற ஜெய், இஷானின் கைகளில் சதியின் கரத்தினை கொடுத்து முடிக்க, அவன் சதியின் கைப்பிடித்து தூக்கி கவனமாக நிற்க வைத்துவிட்டு ஜெய்யின் அருகில் குனிய,
ஜெய் பிடித்திருந்த அந்த பாறை அவன் கைகளை விட்டு வழுவ, அவன் சட்டென்று அந்த சிறிய பாறையையும் தாண்டி உருள ஆரம்பிக்க,
“ம்ருத்யூ…………………………………..” என்ற அலறலோடு அவனை நோக்கி பாய இருந்தவளை பட்டென தடுத்தான் இஷான்…
“ஜெய்…………………..” என இஷானும் கத்த, ஜெய் அவர்கள் இருவரின் பார்வையிலிருந்தும் நொடிப்பொழுதில் மறைய, அப்படியே சிலையாகிப்போனாள் சதி…
மலையின் உச்சிக்கு தங்கையை கவனமாக அழைத்து வந்து அவள் முகத்தினை கைகளில் ஏந்திக்கொண்டு பேச, அவளிடம் எந்த ஒரு அசைவும் இல்லை கொஞ்சமும்…
படபடவென்று அவன் போனை எடுத்து போன் செய்ய, சிக்னலும் இல்லை…
“சே…..” என்று ஆங்காரத்தோடு கத்தியவன்,
“சதி… நீ இங்கயே இரு… நான் இப்போ வந்துடுவேன்… உன் ஜெய்யை நான் கூட்டிட்டு வரேன்… அவனுக்கு எதுவும் ஆகியிருக்காது… ஆனா நீ எங்கேயும் போகக்கூடாது… இங்கேயே இருக்கணும்… சரியா?....” எனக் கேட்க, அவள் பித்துப்பிடித்தவள் போல் இருந்தாள்…
“சதி……….. உங்கிட்ட தான் பேசுறேன்…. சதி இங்கப்பாரு….”
அவளின் தோள் பிடித்து அவன் உலுக்க, சட்டென உடல் அதிர அவனை ஏறெடுத்துப்பார்த்தவள்,
“நான் அவர்கிட்ட போறேண்ணா… என்னை விடு… நான் அவரைப் பார்க்கணும்… பார்க்கணும்…” என எழுந்து கொள்ள முயற்சித்தவளை தடுத்தவன்,
“சொன்னாக்கேளுடா… அதுல நடந்து கீழ போறது ரொம்ப கஷ்டம்… நாம வந்த பாதை மாதிரி இது இருக்காது… முள்ளும், பாறையும், ஏன் பூச்சிகள் கூட இருக்கலாம்…”
“எதுவா இருந்தாலும் பரவாயில்லை… நான் அவர்கிட்ட போகணும்… நான் அவரைப் பார்க்கணும்…”
தன் கைகளில் முகத்தினை புதைத்து அவள் அழ ஆரம்பிக்க, இஷானுக்கு அவளை எப்படி சமாதானப்படுத்த என்று தெரியவில்லை…
அவளை இப்படியே விட்டுச்செல்லவும் மனமில்லாது, ஜெய்யைத் தேடிச்செல்லவும் முடியாது அவன் தவித்தான்…
“சதி… ப்ளீஸ்டா… அழாத… ஜெய்க்கு எதுவும் ஆகாது… டிரெயினிங்க் நேரத்துல இந்த மாதிரி மலை மேல ஏறி இறங்குறதுல அவனை அடிச்சிக்கவே முடியாதுடா… நீ வேணும்னா பாரு… அவன் எதையாவது பிடிச்சு இந்நேரம் மேல வர முயற்சி செஞ்சிட்டிருப்பான்… அப்படி அவன் முயற்சி செய்யும்போது அவனுக்கு நாம உதவ வேண்டாமா?... நீ இங்கேயே இருடா… நான் உடனே உன் ஜெய்யோட வந்துடுவேன்…”
அவன் அவளை தேற்ற முனைந்து கொண்டிருக்கையில், அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான் ஜெய்…
சதியிடம் இஷான் பேசிக்கொண்டிருந்த நேரத்தில், ஜெய்யும் ஒரு மரத்தின் வேரினை கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருந்தான்…
“எதுவா இருந்தாலும் நம்பிக்கையை மட்டும் கைவிட்டுடாத…” பிரம்மரிஷியின் வார்த்தைகள் அந்நேரம் அவனுக்குள் கேட்க,
மெல்ல அந்த வேரினைப் பிடித்து அவன் இழுக்க, அது அசையாமல் இருந்தது…
உயர பார்க்கையில் மரத்தின் வேர் நெடு தூரம் நீண்டிருப்பதும் கண்ணுக்கு தெரிந்தது…
அதை கெட்டியாக பிடித்துக்கொண்டு அவன் மேலே ஏற முயற்சிக்க, அது அவனுக்கு கைகொடுத்து உதவியது…
ஒரு தருணத்தில் வேர் பாறைக்கு இடையில் சிக்கியிருக்க, அவன் அந்த பாறையைப் பிடித்துக்கொண்டு எழுந்தான்…
எந்த பாறை அவனை கீழே நழுவ செய்ததோ அதே பாறை தற்போது அவனை எழுந்து நிற்க வைத்தது…
கவனமாக நிதானமாக ஒவ்வொரு அடியையும் வைத்து மேலே வந்தவன், சதி தன் கைகளில் முகத்தினை புதைத்து அழுவதையும், இஷான் அவளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு செய்வதறியாது தான் விழுந்த பக்கம் பார்ப்பதையும் பார்த்து அவர்களின் அருகில் வந்தான்…
“இஷான்…”
குரல் கேட்டு திரும்பிய இஷான், ஜெய்யைப் பார்த்ததும், இரண்டே எட்டில் அவனை அணுகி, ஜெய்யை அணைத்துக்கொண்டான்…