(Reading time: 26 - 52 minutes)

ஷான் சொன்ன பூ நினைவுவர அதை தேடிச்சென்ற சதிக்கு அங்கே ஓர் ஆச்சரியம் காத்திருந்தது…

மலரின் இதழ்களுக்கு வலிக்காது ஸ்பரிசித்ததும், காற்றில் அது அசைந்து மென் தொடுகையை தலையாட்டி வரவேற்க, செல்லமாய் அதனைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான் ஜெய்….

கைகளை ஆட்டி விளையாடிக்கொண்டே வந்தவளுக்கு ஜெய்யின் முகத்தில் இருந்த ரசனை பிடித்து போனது மிக…

இந்த முகம் தானா நேற்று அத்தனை கோபத்தை வெளிப்படுத்தியது?...

தனக்குள்ளே கேட்டுக்கொண்டாள் அவள் மெல்ல….

சத்தமே வராமல் அவனருகில் வந்து நின்றவளுக்கு ரசனையை வெளிப்படுத்திக்கொண்டிருந்த முகத்தினை அப்படியே கைகளில் ஏந்திக்கொள்ளலாம் போலிருக்க, தனது ஆசையை பிரம்மபிரயத்தனப்பட்டு அடக்கினாள் அவள்…

“போதும்…. படுத்தாதீங்க… ப்ளீஸ்… இவ்வளவு பக்கத்துல உங்களை இப்படி ரசனையோடு பார்க்க எவ்வளவு நல்லா இருக்கு தெரியுமா?....”

அவளுக்குள்ளே கேட்டுக்கொண்ட கேள்வி அவனுக்கு கேட்டதோ??... தன்னையும் அறியாமல் மெல்ல சிரித்தான் அவன்…. கைகள் மட்டும் பூவின் மேலே தான் இருந்தது பட்டும் படாமல்…

“போதும்… விடுங்க…. வெட்கமா இருக்கு….” என மலரும் நாணி நிற்க, இங்கே அவனது சதி என்னும் மலரும் அதே நிலையில் தான் இருந்தாள் வெட்கப்பரவலுடன்…

வெட்க ரேகை மலரில் தென்பட,

“என் ம்ருத்…….”

வாய்திறந்து சொல்லவந்தவன் சட்டென நிறுத்திவிட்டு திரும்ப, அங்கே சதி நின்றிருந்தாள் அதே வெட்கம் மாறா முகத்துடன்…

அவளின் வெட்கம் அவனை தடுமாற வைக்க, இத்தனை நேரம், தான் மலரின் வடிவில் ரசித்தது இந்த சதி மலரைத்தானே என்ற எண்ணம் வர, அவன் கைகள் பூவிலிருந்து நழுவியது உடனேயே…

“சிரிக்கும்போது ரொம்பவே அழகா இருக்குறீங்க… பார்த்துட்டே இருக்கலாம் போல இருக்கு…”

மனதினை மறைக்காமல் அவள் கூற, அவன் எதுவும் பேசவில்லை…

“இப்போதான் புரியுது இந்த குறிஞ்சிப்பூ மேல ஏன் எனக்கு இவ்வளவு பிரியம்னு…”

அவள் சொன்னதும் புருவத்தை அவன் உயர்த்த,

“ஆமா, என்னவருக்கும் இது பிரியமானதா இருக்குறதுனால தான் எனக்கும் இது மனசுக்கு பிடிச்ச ஒன்னா இருந்திருக்கு…”

அவள் சொன்னதைக் கேட்டவனுக்கு மனதினுள் சாரல் அடித்தது… இருந்தும் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாதிருந்தான் அவன்…

“பன்னிரண்டு வருஷத்துக்கு ஒருமுறை மட்டும் பூக்குறது தான் இதோட ஸ்பெஷல்ன்னு நினைச்சிட்டிருந்தேன்… ஆனா அப்படி பல வருஷம் கழிச்சு மலரும்போது என் மனசுக்குப் பிடிச்சவரும் அதை ரசிப்பார், அதையும் பக்கத்துல நின்னு நான் ரசிப்பேன்னு தான் இந்த இடத்துக்கு கடவுள் என்னை வரவைச்சிருக்குறார் போல… கனவிலேயும் இப்படி ஒரு ஸ்பெஷலை இந்த பூ தரும்னு நான் எதிர்பார்க்கலை…”

அவள் அடுத்து எதுவும் பேசிடக்கூடாதென்று நகரப்போனவனை தடுத்தவள்,

“எனக்கு இன்னொரு ஜென்மம் இருந்தா, அப்போ இந்த குறிஞ்சிப்பூவா பிறக்கணும்னு ஆசப்படுறேன்…” என்றதும் அவன் கேள்வியாய் அவளைப் பார்த்தான்…

“பன்னிரண்டு வருஷத்துக்கு ஒருதடவை மட்டுமே பூத்தாலும் உங்க ஸ்பரிசம் இது மேல இதுபோல படும்னா, நான் இந்த குறிஞ்சிப்பூவாகவே பிறக்க நினைக்குறேன்… ஸ்பரிசத்தை எனக்குள் உள்வாங்கி சுவாசித்து என் உயிரை விட நினைப்பேன் என்னை ஸ்வீகரிப்பது நீங்களானால்...”

வலக்கரம் தானாகவே ஜெய்யை நோக்கி உயர, அவள் விழிகளோ அவனின் விழிகளில் தஞ்சம் புக, சட்டென அவளை நோக்கி முன்னேற நினைத்த கால்களை தரையோடு சேர்த்து கட்டிப்போட்டான் ஜெய்…

“என்னை ஸ்வீகரீப்பீங்களா?...”

வார்த்தைகளின் தவிப்பு விழி வழி கண்களில் நீராக உருவெடுக்க, உதடு கடித்து தன் உணர்வுகளை அடக்க போராடிக்கொண்டிருந்தவளை,

அப்படியே தனக்குள் புதைத்து கொள்ள விழைந்தது ஜெய்யின் உள்ளம்…

மனம் நினைத்ததை செய்யாமல், இமைக்கவும் மறுத்து விழி அகற்றாமல் அவளை பார்த்துக்கொண்டே இருந்தான் ஜெய்…

கரம் நீட்டி கேட்டுக்கொண்டிருந்தவளின் விரல் பற்ற முடியாமல் அவன் துடிக்க, அவனின் அசைவற்ற செயலைக்கண்டு அவளும் கலங்கினாள்…

அவள் விழி நீர் திரண்டு, இமைக்கதவுகள் போட்டிருந்த அணையை உடைத்து வெளிவர சில விநாடிகளே இருக்க,

நீர் சிந்தும் தனது முகத்தினை அவன் பார்த்திட வேண்டாமே என்று அவள் தனது பார்வையை நிலத்தில் பதிக்க, தாமதிக்காது அவளை நோக்கி முன்னேறினான் ஜெய்…

அந்த நேரம்,

“ஹேய் அங்க பாரு குறிஞ்சிப்பூ…” என்ற கூவலோடு இரண்டு சிறுவர்கள் வர, சட்டென சடன் பிரேக் போட்டது போல் நின்ற ஜெய், வேகமாக அவளை விட்டு சற்று தள்ளி நின்றான்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.