அந்த பக்கமாக சென்று கொண்டிருந்த கிரணின் பார்வையில் சரயூவை கைகளில் தாங்கிய ஜெய்!
கண்களில் அனல் பறக்க இவர்களிடமாக விரைந்தவனை தடுத்தான் கௌதம்.
“இன்னைக்கு அந்த சஞ்சயை உண்டு இல்லனு பண்றேன்! ஏதோ செய்து சரயூவை அவன் பக்கம் இழுக்க பார்க்குறா. அவன் நினைச்சத நடக்க விட மாட்ட! ஒன்னு அவன் இருக்கனும் இல்ல நான் இருக்கனும்” க்ரோதம் நிறைந்த வார்த்தைகளை கக்கியவனை தடுக்க போராடினான் நண்பன்.
கோபத்தில் கொப்பளித்தவன், அங்கு செல்வதினால் விளையும் விபரீதங்களை பட்டென கணக்கிட்ட கௌதமின் மூளை துரிதமாக அவன் கைகளுக்கு கட்டளையிட்டது.
கிரணின் தோள்களை பின்னாலிருந்து தன்னோடு இறுக்கி பிடித்து அங்கிருந்து அவனை இழுத்து சென்றான்.
தன் உதவியோடு எழுந்து கொண்ட சரயூவை உட்கார வைத்திருந்தாள் சௌம்யா. அவளிடமிருந்த மகிழ்ச்சி சிறிதும் குறைந்திருக்கவில்லை.
“சரயூ, என்னாச்சு? எதுக்கு இத்தனை சந்தோஷம்?” என்று கேட்டதுதான் தாமதம் போல் மறுபடியும் துள்ளி எழுந்தாள் சரயூ.
“வா சௌம்யா!” அவளின் கையை பிடித்து, ஜெய்யின் அருகில் இழுத்து வந்தாள்.
“இங்க பாரே சௌம்யா! சஞ்சு, கம்மலை என்ன செய்திருக்கான்னு பாரு!” என்றபடி ஜெய்யின் இடது காதை சுட்டினாள்.
அந்த அழகிய ஒற்றை வைரக்கல், ஜெய்யின் இடது காதில் குடியேறியிருந்தது.
களையான ஆண்மை நிறைந்த அவன் முகத்திற்கு இன்னும் சற்றுக் களையைக் கூட்டியது அந்த வைரம்.
அதைப் பார்த்த மூவருக்கும் ‘இந்த யோசனை, நம்ம யாருக்குமே வரலையே’ என்று தோன்றியது.
ரூபின் பெருமையோடு வேதிக்கைப் பார்த்தான். ‘கம்மலை என்ன செய்தான்னு பார்த்தியா?’ என்ற செய்தியை தாங்கியிருந்தது அந்த பெருமை.
சற்று முன் வேதிக் சொன்னதை கேட்டு மனக்குழப்பத்தோடு உட்கார்ந்திருந்த சரயூவிற்கு, ஜெய் அங்கு வந்ததே நிம்மதியை கொடுத்தது. ஆனால் அதை நிலைத்திருக்க விடாது, ரூபினின் கேள்விகளுக்கு பதிலான ஜெய்யின் மௌனம். கம்மலை அவனிடம் மிகவும் நம்பிக்கையோடு கொடுத்திருந்தாள். அவளே அறியாமல் அந்த நம்பிக்கை இடிந்து சரிந்து கொண்டிருந்தது.
ரூபின் வழிமறித்ததால், அவளுக்கு முன் நின்றிருந்த ஜெய்யை வெறித்துக் கொண்டிருந்தாள். திடீரென அவன் காதோரம் சிறு மின்னல். சூரியக் கதிர்கள் கம்மலில் பட்டு சிதறியதை கண்டவள் பேரானந்தத்தில் மூழ்கினாள். அன்று பள்ளிப் பருவத்தில் தந்தை கம்மலை பரிசளித்த போது கிடைத்த அதே மகிழ்ச்சியை இன்றும் தனக்குள் உணர முடிந்தது! அன்று தந்தையை கட்டிக்கொண்டவள், இன்று ஜெய்யை கட்டிக்கொண்டாள். அவள் செய்தது சரியா, தவறா என்று ஆராய்ந்திருக்கவில்லை; அதற்கான நேரமும் இருந்திருக்கவில்லை.
ரவிகுமாரின் பாசப் போராட்டத்தின் காரணமாக சரயூவின் ஏழாவது வயதில்தான் காது குத்தப்பட்டது. காது குத்தும்போது இருந்த வலியை விட, பிறகு அது கொடுத்த வலி அதிகமாக இருந்தது. அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் சாரதாவை படுத்திவிட்டாள். அவள் அனுபவித்த வலியை இன்றும் மறந்திருக்கவில்லை. அதனால் தான் சௌம்யா, மூக்குத்தியாக, இந்த கம்மலை மாற்ற சொன்ன போதும் மறுத்துவிட்டாள். தனக்காக ஜெய் காது குத்திக் கொண்டான் என்பதை சிறிய விஷயமாக எடுத்து கொள்ள முடியவில்லை. அதனால் ஏற்படும் வலியை, அவன் தனக்காக பொறுத்தான் என்பதை நினைத்து உணர்ச்சி வசப்பட்டாள்.
“சஞ்சு! உனக்கு வலிக்குதா?” கம்மல் வீற்றிருந்த காதை, அவளின் கை வருடிட வார்த்தைகளோ அவன் மனதை வருடியது.
உடலின் ஒவ்வொரு அணுவும் அவளின் மென்மைக்காக ஏங்கிக்கொண்டிருந்த வேளையில் கிடைத்த, அவளின் மென்மையான ஸ்பரிசமும், அதைவிட மென்மையான குரலும் ஜெய்யை இன்னும் கிறக்கத்தில் தள்ளியது.
மனதிலிருந்த ஆர்பாட்டத்தை மறைத்து அவள் முகத்தையேப் பார்த்திருந்தான்.
கேள்விக்கு பதில் சொல்லாது, அவன், தன்னையேப் பார்த்திருக்கவும்
‘ரொம்ப வலிக்குதோ?’ என்று யோசித்தவள்,
“நீ கவலைப்படாத சஞ்சு! இந்த வலி குறையறதுக்கு என்ன செய்யலாம்னு அம்மாட்ட கேட்டு சொல்ற”
இப்போதும் ஜெய்யின் பார்வையில் மாற்றமில்லாது போகவும்
‘வலியால காது எரிஞ்சதே எனக்கு, அதே மாதிரி எரியுதோ?’
“காதுல எரிச்சல் இருக்கா? நான் வேணா ஊதி விட்ற, அம்மா கூட எனக்கு ஊதி விட்டாங்க தெரியுமா!” என்று சொன்னவள்