கூடத்தின் எதிரில் ஆசிரியை ஒருத்தி மயில் போல் நின்று கொண்டிருந்தாள். அவளுக்கு எதிரே நூறு குழந்தைகள் அழகாகச் சீருடை யணிந்து கொண்டு சிட்டுக் குருவிகளைப் போல் நின்றுகொண்டிருந்தன. அந்தச் சின்னக் குழந்தைகள் இரண்டு கைகளையும் ஒரே நேரத்தில் தலைக்குமேல் தூக்கியும், எதிரில் நீட்டியும், பக்கத்தில் விரித்தும், குனிந்தும், நிமிர்ந்தும் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள்.
வரிசை வரிசையாக அவர்கள் நின்றதும், ஒரேமாதிரியாகக் கைகால்களை அசைத்ததும், ஒரே வரிசையாகத் தொடர்வண்டி போல் ஓடியதும், பூக்கோலம் இட்டதுபோல் வட்டமாகவும், வளைந்தும் நின்றதும் மரத்தின் மேல் இருந்து பார்க்கும் பொழுது அழகழகாய் இருந்தது.
இத்தப் பள்ளிக் கூடத்தில் எப்படியாவது தன் சிட்டுக் குஞ்சுகளைச் சேர்த்து விட வேண்டும் என்று அம்மாச் சிட்டுக்கு ஆசையாக இருந்தது.
நாள்தோறும் அந்த அம்மாச் சிட்டு இரைதேடப் பள்ளிக் கூடத்தின் வழியாகப் பறந்து போகும் போதெல்லாம் இந்த ஆசை உண்டாகும்.
பள்ளிக் கூடத்தில் சேர்ப்பதென்றால், முதலில் பணம் கட்ட வேண்டும்; நன்கொடை கொடுக்க வேண்டும்; சீருடை தைக்க வேண்டும்; இதற்கெல்லாம் பணம் வேண்டுமே அந்தச் சிட்டு எங்கே போகும்?
ஒரு நாள் மாலை நேரம். தென்றல் சிலு சிலு வென்று வீசிக்கொண்டிருந்தது. கதிரவன் செம்மஞ்சள் நிறத்தோடு மேற்குத் திசையில் இறங்கிக் கொண்டிருந்தான். அப்பொழுது அந்தப் பள்ளிக்கூடத்துத் தலைமையாசிரியை எதிரில் உள்ள புல்வெளியில் நடந்து கொண்டிருந்தாள்.
அம்மாச் சிட்டு அந்த வழியாகப் பறந்து வந்தது. தலைமை ஆசிரியையைப் பார்த்தவுடன், மெல்லக் கீழே இறங்கியது. அவள் நடந்து வரும்போது எதிரில் புல்வெளியில் வந்து நின்று கொண்டது.
'அம்மா அம்மா’ என்று கூப்பிட்டது சிட்டு.
தலைமையாசிரியை திரும்பிப் பார்த்தாள்.