தயங்கி நின்ற கூட்டத்தினர் ஓடிவந்து திருடனைப் பிடித்துக் கொண்டனர். அவனை இழுத்துச் சென்று காவல் நிலையத்தில் விட்டனர்.
தலைமை யாசிரியையின் பணப்பை மீட்கப் பட்டது. அவரிடம் திருப்பிக் கொடுக்கப் பட்டது. தலைமை ஆசிரியை அந்த இளஞ்சிட்டுகள் இரண்டையும் நன்றியோடு நினைத்துக் கொண்டு பள்ளிக்குச் சென்றாள்.
பள்ளியில் மற்ற ஆசிரியைகளிடமும் அந்தச் சிட்டுக்கள் செய்த உதவியை எடுத்துக் கூறினாள். அன்று முதல் எல்லாரும் அந்தச் சிட்டுக்களை அன்போடு நடத்தினார்கள்.
ஒரு நாள் பள்ளிச் சிறுமி ஒருத்தி தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தாள். யாரோ சிலர் ஒரு உந்தில் வந்து இறங்கினார்கள். அந்தச் சிறுமியை வழிமறித்துத் தூக்கி உந்திற்குள் போட்டார்கள்.
அவள் கதறிக் கதறி அழுதாள்; உந்து புறப்பட்டு விட்டது.
அரச மரத்தில் விளையாடிக் கொண் டிருந்த சிட்டுக்கள் இதைப் பார்த்தன.
உடனே, விருட்டென்று பறந்தன. அந்த உந்து ஒட்டுபவனை மாறி மாறி முகத்தில் கொத்தின. அவன் பயந்து உந்தை நிறுத்தி விட்டான். உள்ளே சிறுமி கதறிக் கதறி அழுது கொண்டிருந்தாள்.
அவளை அடித்து அவள் அணிந்திருந்த சங்கிலி, தோடு, மோதிரம், ஆகியவற்றை இரண்டுபேர் கழற்றிக் கொண்டிருந்தார்கள்.
இரண்டு சிட்டுக்களும் அவர்கள் முகத்தைக் கொத்தின. படபடவென்று சிறகடித்து அவர்கள் கண்ணில் தூசி பறக்கச் செய்தன. அவர்கள் சிட்டுக்களின் தாக்குதலால் , திணறிக் கொண்டிருக்கும் பொழுது, சிறுமி உந்திலிருந்து இறங்கி ஓடிவிட்டாள்.