பானுவின் மகிழ்ச்சி எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. உடனே நான் ஒப்புக்கொண்டேன். எங்கே போவது, எத்தனை மணிக்குப் புறப்படுவது, என்னென்ன எடுத்துச் செல்வது, எப்போது திரும்பி வருவது எல்லாம் ஒன்று விடாமல் வாதிட்டு முடித்து விட்டோம். மாமாவுக்குப் புளிச்சாதம் வேண்டுமாம். நான் போளி செய்யச் சொன்னேன். பானுவுக்குத் தேங்காய் அல்வா என்றால் உயிர்! மூன்றையும் சிறிதளவு சிறிதளவு செய்வது என்று முடிவு செய்தோம். படுக்கையில் படுக்கும்வரைப் பேச்சு வளர்ந்துகொண்டே இருந்தது. அதென்னவோ அவர்கள் மகிழ்ச்சியுடன், குறையில்லாமல் ஒற்றுமையாக வாழ்கின்றார்கள் என்றால் எவ்வளவு ஆனாலும் என் மனம் ஒப்புக்கொள்ள வில்லை.
பானு விடியற்காலை மூன்று மணிக்கே எழுந்திருந்தாள் போலும். அடுப்பு மூட்டி என்னென்னவோ செய்து கொண்டிருந்தாள். விளக்கைப் போட்டு என் கட்டில் பக்கமாக வந்து அலமாரியிலிருந்து சாமான்கள் ஏதோ எடுத்துக்கொண்டாள்.
"எப்பொ எழுந்திரிச்சே பானூ?" என்றேன்.
"உனக்கு முழிப்பு வந்துட்டுதா என்ன? இனிமே வர மாட்டேன் ஆவட்டும் - படுத்துக்கோ!" என்று சொல்லி விளக்கை அணைத்துவிட்டுப் போய்விட்டாள். போர்வையை இழுத்துத் தலைவரையில் போர்த்திக் கொண்டேன். தூக்கம் வரவில்லை. மேலும் தூங்குவதற்கு மனம் வரவில்லை. பாவம் பானு, நல்ல இருட்டில் எழுந்து விடிய விடிய வேலை செய்துகொண்டிருக்கிறாள். ஓரளவு ஏதாவது உதவி செய்தால் நன்றாக இருக்கும். எனக்கு ஒரு வேலையும் தெரியாது - எழவு! எழுந்து சென்று மணை போட்டுக்கொண்டு உட்கார்ந்து கொண்டேன்.
"இதுக்குள்ளேயே எழுந்திட்டியா என்ன?" என்றாள் அரிசி கழுவிக்கொண்டே.
"தூக்கம் பிடிக்கிலே. உனக்குத் துணையா உக்காரலாம்னு வந்துட்டேன்."
"நல்லவன் தான். கொஞ்சம் தேங்கா துருவித் தர்றியா?" என்றாள். அந்த மையிருட்டிலேயே கழுவியும் கழுவாமலும் முகத்தைக் கழுவிக் கொண்டேன். இல்லை என்றால் மனச்சாட்சி