சத்தம்போடு மல்லவா! தேங்காய் நீரை நான் ஒருவனே குடித்துவிட்டேன். பானு ஏதோ வேலைகள் செய்துகொண்டே பேச்சுக் கொடுத்தாள். "தேங்கா துருவற்து இன்னும் முடியலியா? இந்த ஏலக்காயெ மெதுவா பொடிபண்ணு. இதோ இங்கே மணைமேலே வெக்கறேன். அப்புறம் முந்திரிப் பருப்பு உரிச்சு வை. கொஞ்சம் சீக்கிரமா ஆகட்டும்டா!" என்று சொல்லி அதிகாரம் செய்யலானாள்.
"நல்லா இருக்குது! விடியற்துக்குள்ளே சமயல் முழுக்கக் கத்துக்குடுத்துடலாம்னு இருக்கறியா!" என்றேன். மெதுவாகத் தேங்காய்த் துருவிக்கொண்டே.
"நல்லதுதானே? உன் மனெவி சுகப்படுவா" என்றாள்.
"அவளோட சுகத்துக்காக என்னெக் கஷ்டப்பட வெக்கிறியா"
"நாளெக்கு உன் சுகத்துக்காக அவ கஷ்டப்பட மாட்டாளா?"
"என்னானாலும் நேத்திலே யிருந்து நீ ரொம்ப பேசிக் கிட்டிருக்கறே."
"சரிதான் அண்ணா! வருஷத்துக்கு ஒரு நாளாவது புருஷனும் மனெவியும் சமயலறெலே உக்காந்து பேசிக் கிட்டே வேலே செஞ்சிகிட்டா சந்தோஷமா இருக்காது!"
"இன்னும் கேக்கணுமா? அப்படீன்னா உடனே போய் மாமாவெ எழுப்பிவரச் சொல்றியா?"
"போ போ - உனக்குப் பல்லு கொஞ்சம் உறுதியா இருக்கறாப்போல இருக்குது."
"அடேயப்பா! அம்மாவுக்குக் குதிரெ லட்சணம்கூட இருக்கறாப்போல இருக்குது" என்றேன். அதற்குள் திடீரென்று நினைவு வந்து "பானூ! இவ்வளவு வேலெங்க எப்பொ கத்துக்கிட்டேன்னு சொல்லு! காபி போடக் கூடத் தெரியாது. ஏழுமணி வரெக்கும் போர்வையெ இழுத்திப் போத்திக்கிட்டுத் தூங்கறவ. இப்போ...."
"இத்தனை நாள்ளெ என்னெ மெச்சிக்கற்துக்கு நீ வந்து சேந்தே. இது ஒரு புனர்ஜன்மம்தான்!"