பானு உள்ளுக்குள் நொந்துகொண்டே சொன்னாள், "இன்னக்கித் தோட்டத்துக்குப் போகலாம்னு நினெச்சோம் இல்லியா? காரியர்கள் கூட நிரப்பி வெச்சிட்டேன்."
"பெரிய வேலை செஞ்சிட்டே! தோட்டம் எங்கேயும் ஓடிப் போவாது. ஆவட்டும்! அடுத்த வாரம் போகலாம். என்னங்க ராவு சார்! ஹாயா ஓட்டல்லே இருந்து கொண்டுவந்தா மாதிரி காரியர்களெ பிரிச்சி வெச்சி அண்ணன் தங்கெ ரெண்டுபேரும் சாப்பிட உக்காருங்க. என்ன சொல்றீங்க?" என்றார் சிரித்துக்கொண்டே. உண்மையில் எனக்கு வெறுப்பாக இருந்தது. இருந்தாலூம் சிரித்துவிட்டுப் பேசாமலிருந்தேன். துணியை மாற்றிக்கொண்டு அவர் போய்விட்டார். ஐந்து நிமிஷங்களில் நடந்துவிட்ட இந்த எதிர்பாராத அதிர்ச்சியில் என் மூளை கலங்கியது போலவே இருந்தது. பெரு மூச்சு விட்டுத் தலையைத் திருப்பிப் பார்த்தால் பானு வாயிற்படியின் மீது தலையைச் சாய்த்துக்கொண்டு நின்று கொண்டிருந்தாள். கண்களில் நீர் கசிந்திருந்தது.
"சே ! இதுக்கே போய் அழறியா என்ன? சரியான ஆளுதான் நீ. ஊர்லே யிருந்து நண்பன் வந்தால் யாருக் கானாலும் சந்தோஷம் இருக்காதா? பிக்னிக் இல்லாட்டா என்ன இப்பொ? இன்னொரு முறெ போகலாம் ஆவட்டும். மாமா சொன்னாப்பலேயே உக்காந்து பேசிக்கலாம்" என்றேன் அவளுக்கு ஆறுதல் சொல்லும் முறையில்.
பானு கண்களைத் துடைத்துக்கொண்டே சொன்னாள்--"உனக்குத் தெரியாது அண்ணா! அவர் போனது நண்பனெப் பாக்கறதுக்காக இல்லே. இந்தச் சீட்டாட்டத்தினாலே என் குடும்பம் எவ்வளவு சீரழியதுன்னு உனக்குத் தெரியாது."
நான் துள்ளி்விழுந்தேன், "பானூ!"
"ஆமாம் அண்ணா! உனக்கு எப்படிச் சொல்றது?"
அவருக்கு அவரே பிக்னிக் திட்டம் போட்டு, பாதி இரவில் எழுந்து மனைவி எல்லாம் செய்தால்... இறுதியில் எல்லாவற்றையும் வீணாக்கிவிட்டுப் போனது சீட்டாட்டத்திற்கா? என் வியப்பிற்கு எல்லை இல்லை. அவர் சீட்டு ஆடுவதற்கு அல்ல, பானு சீட்டாட்டத்தை--