பானு கண்ணெடுத்துப் பார்த்தாள்,"அடிக்கடியா? அடிக்கடி என்ன எழவு? ஒவ்வொரு நாளும்! ஒவ்வொரு மணியும்! ஒவ்வொரு நிமிஷமும்! கிளப்புதான் வீடுவாசல் எல்லாம்! சீட்டாட்டம்தான் குடுத்தனம்! சிநேகிதங்கதான் மனெவி மக்கள்! அவருக்கு வேறொண்ணும் வேணாம். வீடு நரகம்! மனெவி ராட்சசி! மகன் எதிரி! இன்னும் என்ன சொல்றது?"
நான் சிறிது நேரம் சிந்தித்துக்கொண்டிருந்தேன்.
"பானூ! உனக்குக் கொஞ்சம் கஷ்டமா இருக்கும். இருந்தாலும் மத்தவங்களோட சூழ்நிலையும் கொஞ்சம் புரிஞ்சுக்கணும். பாரு! இந்தப் புது யுகத்தெ நீயும் ஆமோதிக்கறெ, விரும்பறெ. தேச, காலச் சூழ்நிலெங்களினாலே மார்ற விஷயங்களுக்குக் கொஞ்சத்துக் கொஞ்சமாவது நாம பழக்கப்படுத்திக்கணும். சிகரெட் பிடிக்கற்து, ஊர் சுத்தற்து, சீட்டாடற்து, கிளப்புக்குப் போறது, சினிமா பாக்கற்து, தமாஷா பொழுது போக்கற்து இதெல்லாம் நாம விரும்பும் நவநாகரிகத்தின் சிறப்புங்கதானே--ஒரு சிநேகிதன் சிகரெட் கொடுத்தா 'தாங்க்ஸ்' சொல்லி வாங்கிக்கல் லேன்னா மரியாதெ குறவு! பத்து பேரு சேந்து சீட்டாடணும்னு சொல்லும்போது பின்வாங்கனா கோழெத்தனம்! ரோட்லே சந்திச்சவன் ஆனாலும் ஓட்டலுக்கு அழெச்சுட்டுப்போய் காபி வாங்க ஊத்தலென்னா அகௌரவம்! தனக்குச் சினிமா பாக்கணும்னு ஆசெ வந்தா சிநேகிதங்களெக் கூப்பிடாமெ ஒர்த்தனே போய் வந்தா அவமானம்! நல்லதோ கெட்டதோ சில பழக்கங்க தவிர்க்க முடியாமெ உண்டாயிட்டு வருது. இன்னக்கி எல்லாத்தெயும் நல்லதாவே ஏத்துக்கிட்டு வர்ற ஆம்பளெங்க எதுக்கும் பின்வாங்க மாட்டாங்க. காலச் சூழ்நிலையெ ஒட்டி நல்லதானாலும் கெட்டதானாலும் அனுபவிக்கறதையே பழக்கம் செய்துக்கணும் பானூ!"
" விடுதியிலெ மாமா சிகரெட் கொடுத்தப்பொ வேணாம்னு சொல்லிட்டேன்னு சொன்னே. ஞாபகம் இருக்குதா?"
தொடரும்