நினைக்கிறேன். பாபு நன்றாக இருக்கிறான். நாங்கள் பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாடினோம். போகி அன்று வெள்ளைப் பட்டுப் புடவை, பொங்கலன்று சின்னக்கா கொடுத்த சிவப்பு பட்டுப் புடவை கட்டிக் கொண்டேன்; நான்கு நாட்களும் எனக்குக் கைவந்த டிஃபன்கள் செய்தேன். என்ன ஆனாலும் நம் ஊருக்கு வந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்' கண்ணுலே யிருந்து நீர்த் துளிங்க எழுத்துங்க மேலெ விழுந்தது. முந்தானெயால் மெதுவாக ஒத்தி எடுத்தேன். கதவு தட்ற சத்தம் கேட்டது. போய்த் தெறந்தேன். கோவப் பழம் போலச் செவந்த கண்ணோட வேகமா நடந்து வந்து கட்டில் மேலெ உக்காந்துட்டார். 'சீட்டாட்டம் சீட்டாட்டம்ணு சண்டெ புடிச்சியே தவர, அதனாலே எவ்வளவு சம்பாதிச்சேன் தெரியுமா? நூத்தி முப்பது ரூபா! நாலு நாள்ளே! நீ சொன்னாப்பல வீட்லே கைகட்டிட்டு உக்காந்திருந்தா இந்தப் பணம் எப்படி வரும்? அம்பது ரூபா எடுத்துட்டு உனக்கு வேணுங்கற புடவெ ஏதாவது வாங்கிக்கோ!"
நான் சிரிச்சேன். அந்தச் சிரிப்பிலெ எத்தனெ அர்த்தங்க இருக்குதோ அவரெப் போலவங்க எப்பவும் புரிஞ்சிக்க முடியாது. "அநியாயமான பணத்துக்காக அலையும் அயோக்கியனே! உன்னெப் போலவே மனுஷங்க எல்லாரும் மனுஷத் தன்மையெ மறந்துட்டாங்களா? நொந்து போன மத்தவங்க இதயத்தெ உன் பணத்தாலே சந்தோஷப்படுத்த முடியுமா? உனக்காக உன் மனெவி குழந்தெங்க எவ்வளவு அழுதாங்களோ, உன் வேண்டா வெறுப்புக்காக எவ்வளவு வேதனெப் பட்டாங்களோ - அது என்னக்காவது உனக்கு அர்த்த மாகுமா? மட்டமான பணத்துக்காக உங்களவங்களெ அழவெக்கும் நீ, மனெவி கண்ணீருக்குக்கூட இளகாத நீ, மனசே இல்லாத நீ ஒரு மனுஷனா? இந்த உண்மெ உனக்கு என்னக்காவது தெரியவருமா?" கேக்கவேண்டிய வரெக்கும் கேக்கணும்னு, கோவம் தீர்ற வரெக்கும் திட்டணும்னு, மத்தவங்க மேலே ஏறி மிதிக்கும் மனசெக் கண்டிச்சிக்கிட்டே சிரிச்சேன். 'என் உடம்புக்குத் துணியே இல்லாத கதி வந்தா நெருப்பு மூட்டிக்கிட்டு எரிஞ்சு சாம்பலாயி மானத்தெக் காப்பாத்திக்குவேனே தவர இந்த மாதிரி பாவம் நெறஞ்ச பணத்தாலே...'
'ஆஹ்ஹஹ்ஹா!' என்று கோரமாச் சிரிக்க ஆரம்பிச்சார். 'ஆஹா! லட்சியப் பெண்! எல்லாப் பொம்பளெங்களும் இப்படிப் பெரிய குப்பெ லட்சியங்களெ வெச்சிட்டு உக்காந்திருந்தா...'
'என்னக்கோ நல்லா ஆகி இருக்கும்.'