'குடுத்திட்டேன். என்கிட்டே இருந்துது, முன்னே நீங்க குடுக்கிறீங்களோன்னு கேட்டேன்.' பெரிய வெற்றி அடைஞ்சவர்போல சிரிச்சார். 'குடும்பத்தலெ பங்கு உனக்கும் வேணும்னு சொல்றெ யில்லே!'
'ஆமாம். வெறும் காசு செலவுபண்ற விஷயத்தலெ மட்டும் எனக்குப் பங்கு குடுங்க.'
சரி என் பங்குகளும், சுதந்தரங்களும் ஒரு பக்கத்தலெ இருக்கட்டும். மாசத்துக்கு நூத்தி ஐம்பது ரூபா சம்பளம் வருதுன்னா குறெஞ்சது பத்து ரூபாயாவது மிச்சம் புடிக்க லேன்னா, தீடீர் திடீர்னு வர்றதேவெங்களெ எப்படி நிறவேத்திக்கறது? கல்யாணத்துக்கு வாங்கன துணிகளே இது வரெக்கும் வெச்சிக்கிட்டிருக்கறென். நாளலே இருந்து எந்தச் செலவெப் பாத்தாலும் வளருமே தவர குறையாதில்லே? இப்பவே நாம் கடனாளி ஆயிட்டா பையன் வளந்து படிக்க வர்றபோது என்ன ஆவற்து? இந்த மாதிரி விஷயங்களெ எத்தனெ தடவெ எடுத்துச் சொன்னேன் தெரியுமா? என்ன பலன் கிடெச்சதுங்கறே? எனக்குப் பண விஷயமா ஒண்ணுமே சொல்ல மாட்டார். எவ்வளவு வருது? எவ்வளவு செலவாவுது? எவ்வளவு மீறுது? இல்லெ எவ்வளவு கடனாவுது? முதல்லெ நம்ம அருகதெ என்ன? நாம எவ்வளவுலே இருக்கறோம்? இன்னக்கி என் குடும்ப நிலெ என்னவோ எனக்குத் தெரியாது. எனக்குப் பட்டுப் புடவெ வாங்கணும்னு இருக்குது. அந்தச் சக்தி எனக்கு இருக்குதோ இல்லியோ தெரியாது. நான் என்ன ஆசெப்படனமோ, எந்த ஆசெயெ நிறைவேத்திக்க முடியுமோ தெரியாது. 'பண விஷயம் உனக்குத் தேவெயில்லெ. உன்னாலெ ஒரு காலணா சம்பாதிக்க முடியாதப்பொ, நீ ஒரு காலணா குடுக்க முடியாதப்பொ மீறுதோ குறெயுதோ உனக்கெதுக்கு? அந்தத் தலைவலி யெல்லாம் நான் அனுபவிக்கறேன். நீ நிம்மதியா உக்காந்துக்கோ.' பாத்தியா நான் எவ்வளவு சுகப்பட்றேனோ? பண விஷயம் தெரிஞ்சிக்காம உக்காந்திட்டா எல்லாம் சுகந்தான் போல இருக்குது. ஒருத்தர் நிலெயெ இன்னொருத்தர் தெரிஞ்சிக்கணும்னு சொல்றாங்க ஒருத்தர் கஷ்ட சுகங்களெ இன்னொருத்தர் பகுந்துக்கணும்னு சொல்றாங்க. அது இந்தக் குடும்பத்தலெ எப்படி நடக்கும்? எனக்குச் சொன்னா இவ்வளவு செலவு ஏன் ஆவுதுன்னு கேக்கமாட்டேன்? இந்தச் செலவு முக்கியம்னு எடுத்துச் சொல்லமாட்டேன்? அதனாலேதான் அந்தத் தலெவலியெத் தலெயிலெ போட்டுக்காம சந்தோஷமா இருக்கணுமாம்.
இங்கெ பாரு, நம்ம ஊருக்குப் போனா அக்காங்க மத்தவங்க எத்தனெயோ ஜாக்கட் துணிங்க குடுக்கறாங்க. எவ்வளவோ சாமானுங்க வாங்கறாங்க. அதெல்லாம் வாங்கிக்கதான் முடியுதே தவர ஒருத்தருக்கும் ஒண்ணும் குடுக்க முடியாம போவுது. அக்காக் குழந்தெங்களுக்காவது ஏதாவது வாங்கிட்டுப் போகலாம்னா எனக்குப் பணம் எங்கே இருந்து வருது?