தோன்றி மறைவதுபோல் இருந்தது ஸ்வர்ணத்துக்கு.
தங்கப் பதுமைபோல் மாலையும், கழுத்து மாய் ஸரஸ்வதியின் தாய் நேற்றுதான் ஸ்வர்ணத்தின் தமையனைக் கைப்பிடித்து வீட்டில் நுழைந்தது போல் இருக்கிறது. அதற்குள்ளாக ஒரு. பெண்ணைப்பெற்று, திக்கில்லாமல் விட்டுவிட்டுப் போய் விட்டாள். அவளுக்குத்தான் ஸ்வர்ணத்தினிடம் எவ்வளவு அன்பு! நாத்தனாரும் மதனியும் கூடப்பிறந்த சகோதரிகள் மாதிரி இருந்தார்கள். அவள் மறைவுக்குப் பிறகுதான் ஸ்வர்ணத்தின் தமையன் மனம் வெறுத்து எங்கோ இருக்கிறான். பெற்ற பெண்ணைப்போல் வளர்த்த ஸரஸ்வதியைப் பிரிந்து ஸ்லர்ணத்தால் இருக்க முடியுமா?
ஸ்வர்ணம் ஆழ்ந்த யோசனைக்கு அப்புறம் பெருமூச்சு விட்டாள். பிறகு அங்கு நிலவி இருந்த அசாதாரணமான அமைதியைக் கலைத்துக் கனிவுடன், "உனக்கு இங்கே என்ன கஷ்டம் ஸரஸு?" என்று கேட்டாள் ஸரஸ்வதியைப் பார்த்து.
"கஷ்டம் ஒன்றுமில்லை அத்தை. எனக்கும் வெளி ஊர்களெல்லாம் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. கொஞ்ச காலம் அப்படித்தான் பார்த்துவிட்டு வருவோமே என்று தோன்றுகிறது" என்று வெகு சாமர்த்தியமாக மனக் கஷ்டத்தை மறைக்க முயன்றாள் ஸரஸ்வதி.
ஸ்வர்ணத்தின் இளகிய மனதால் அதற்குமேல் நிதானமாக இருக்க முடியவில்லை. கண்களில் கண்ணீர் பெருக ஸரஸ்வதியைச் சேர்த்து அணைத்துக்கொண்டு, ”அம்மா! திடீரென்று ஊருக்குப் போகிறேன் என்று சொல்லுகிறாயே, உன்னை அனுப்பி விட்டுத் தனியா இந்த வீட்டில் எப்படி இருப்பேன் சொல்?" என்றாள் ஸ்வர்ணம். ஸரஸ்வதி அத்தையின் கைகளை ஆசை யுடன் பற்றிக்கொண்டு, "நீயும் அத்தானும் அடிக்கடி என்னைக் கல்யாணம் செய்து கொண்டு குடியும் குடித்தனமுமாக இருக்க வேண்டும் என்று சொல்லுகிறீர்களே! கல்யாணம் ஆன பிறகு புக்ககம் போக வேண்டாமா அத்தை? இதற்கே இப்படிப் பிரமாதப்படுத்துகிறாயே நீ?" என்று கண்ணைச் சிமிட்டிக் குறும்புத்தனமாகப் பார்த்துக்கொண்டே அத்தையைக் கேட்டாள்.
"அசட்டுப் பெண்ணே! அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?" என்று திகைப்புடன் தன்னைப் பார்க்கும் அத்தையிடம், ஸரஸ்வதி ரகசியம் பேசும் குரலில், "என்னால் அத்தானுக்கும் சாவித்திரிக்கும் ஏதாவது சச்சரவு வந்துவிடும். நான் நன்றாகப் பாடுகிறேன் என்று சாவித்திரிக்குப் பொறாமை போலிருக்கிறது. அதனால் அவர்கள் ஒருவருக்கொருவர் மனஸ்தாபப் படுகிறார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் சந்தோஷமாக இல்லாவிட்டால் உன் மனம் நிம்மதியாக இருக்குமா அத்தை?" என்று கேட்டாள்.
ஸ்வர்ணத்திற்கு க்ஷணப்பொழுதில் எல்லாம் விளங்கிற்று. ஸரஸ்வதி அந்த வீட்டில் இருப்பதனால் சாவித்திரியும் ரகுபதியும் மனஸ்தாபப்படுகிறார்களா? இதென்ன விந்தை?