''யார் கண்டு பிடித்திருந்த போதிலும், அவ்விரண்டு பேரும் ஒருவருக்கொருவர் பெரிய எதிரிகள்'' என்றான் ராஜா.
"அதெப்படி?'' என்று கேட்டாள் பாரதி.
”ஆணியைக் கண்டால் அதன் மண்டையில் அடிக்கிறது இந்தச் சுத்தியல். சுத்தியலைக் கண்டால் எதிர்த்து நிற்கிறது இந்த ஆணி. ஆகவே இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரிகள்!
இப்படியே நீங்கள் சுவர் முழுவதும் ஆணி அடித்துக் கொண்டிருந்தால் அப்புறம் இன்னொரு புதிய ஹாஸ்டலே கட்ட வேண்டியதுதான்... தரையில் பாருங்கள், எத்தனை ஆணிகளை வளைத்துப் போட்டிருக்கிறீர்கள்?''
இன்னொரு ஆணியை வாங்கிப் பலமாக அடித்த ராஜா, "ஐயோ! என்று அலறியபடியே கீழே குதித்து இடது கையை உதறிக் கொண்டான். சுத்தியல் அவன் இடது கைக் கட்டை விரலை நசுக்கிவிடவே இரத்தம் பெருகிவந்தது.
கையிலிருந்து பெருகி வழிந்த ரத்தத்தைக் கண்டதும் பாரதி பயந்து போய்விட்டாள்.
அவன் கட்டை விரலைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டவள், சிநேகிதிகள் பக்கமாகத் திரும்பி ''ஃபஸ்ட் எய்ட் பாக்ஸ் ப்ளீஸ்” என்று பரபரத்தாள்.
'பாணிக்கிரகணம் செய்து கொடுக்கப் போவதாகப் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு....... என்று அந்தப் பொல்லாத பெண்கள் கண் சிமிட்டியபடியே முதல் உதவிப் பெட்டியைக் கொண்டுவர ஓடினார்கள்.
பிரின்ஸிபால் பார்வதி தமது அறைக்குள் சென்று நாற்காலியில் அமர்ந்தபோது டெலிபோன் மணி அடித்துக் கொண்டிருந்தது. ரிசீவரை எடுத்துப் பேசி முடித்ததும் மேஜை மீதிருந்த கல்லூரியின் பொன் விழா அழைப்பிதழ் அவள் கவனத்தைக் கவர்ந்தது. வழவழப்பான காகிதத்தில் 'சேதுபதி' என்ற பெயர் பொன் எழுத்துகளால் பொறிக்கப் பட்டிருந்தன. பார்வதி ஒருமுறை அப் பெயரை நெஞ்சம் நிறையச் சொல்லிப் பார்த்துக் கொண்டாள். "இந்தப் பெயரில் என்ன மாய சக்தி இருக்கிறது? இதைக் காணும் போது எனக்கு ஏன் வியர்க்கவேண்டும்?' என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டாள். அவள் சிந்தனை அவரையே சுற்றி வட்டமிட்டது.
''நாளை விழாவில் இவரை எவ்வாறு அறிமுகப்படுத்திப் பேசுவது? சுருக்கமாக அழகாகப் பேச வேண்டும். வளவளவென்று பேசினால் அவருக்குப் பிடிக்காது. பேசும்போது குரலில் தடுமாற்றம் இருக்கக்கூடாது. நடுக்கம் தொனிக்கக் கூடாது.''
பார்வதிக்குக் கூட்டமோ சொற்பொழிவோ புதிதல்ல. இதற்கு முன் எத்தனையோ கூட்டங்களில் எவ்வளவோ முறை பேசியிருக்கிறாள். அறிவாளிகளின் பாராட்டுதல்களை யும்