(Reading time: 9 - 17 minutes)
Muthu Sippi
Muthu Sippi

  

"போய்க் குளித்து விட்டு வாருங்கள் மாமா, தோசை தின்னலாம்" என்றான் பாலு. குழந்தைப் பருவத்தைப் போலும், குழந்தை உள்ளங்களைப் போலும் களங்கமற்றவை வேறு எதுவுமே இருக்க முடியாது. தாயின் மனத்திலே கொந்தளிக்கும் எண்ணங்களையோ மூர்த்தியின் மனத்தில் இருக்கும் நஞ்சுகலந்த அன்பைப் பற்றியோ பாலு அறிய மாட்டான்.

  

மூர்த்தி சாவியைச் சுழற்றிக் கொண்டே கல்யாணத்தின் வீட்டை அடைந்தான். கதவைத் திறந்து நேராகக் கிணற்றடிக்குச் சென்று ஸ்நானம் செய்து விட்டு, வாசனைத் தைலம் தடவி தலை வாரி, ஊரிலிருந்து வரும் போது வாங்கி வந்த பழங்களை எடுத்துக் கொண்டு பவானியின் வீட்டுக்கு வந்தான்.

  

கூடத்துப் பெஞ்சில் தட்டில் தோசைகளும், சுடச் சுடக் காப்பியும் வைக்கப் பட்டிருந்தன. பழங்களைப் பாலுவிடம் கொடுத்துவிட்டு மூர்த்தி சிற்றுண்டி அருந்தினான் .

  

பவானி சமயலறையை விட்டு வெளியே வந்தாள். வெறுமனே சாத்தியிருந்த தெருக் கதவை நன்றாகத் திறந்தவாறு சேஷாத்திரி உள்ளே வந்தார். பெஞ்சியிலே உட்கார்ந்து பல்லை இளிக்கும் மூர்த்தியையும், கையில் தோசையுடன் மிரண்டு பார்க்கும் பவானியையும் பார்த்தார். ஊஞ்சலில் இருந்த பழங்களைப் பார்த்தார்.

  

"ஹும்..." என்று தொண்டையைக் கனைத்துக் கொண்டார்.

  

பவானிக்குத் தைரியம் ஏற்பட்டது. ”வாருங்கள், எங்கே, இவ்வளவு தூரம்?” என்று கேட்டுக் கொண்டே மூர்த்தியின் தட்டில் தோசையை வைத்து விட்டு அவரை உட்காரும்படி கூறினாள்.

  

"ஒன்றுமில்லை. உன் பிள்ளையைப் பத்து நாட்களாக அந்தப் பக்கம் காணோம். உடம்பு ஏதாவது சரியில்லையோ என்று பார்த்துப் போக வந்தேன். ஹைஸ் கூலில் தானே சேர்க்கப் போகிறாய்?" என்று கேட்டார் சேஷாத்ரி.

  

"உடம்பு ஒன்றுமில்லையே! நான் தான் வெயிலில் அலைய வேண்டாம் என்று சொன்னேன். ஹைஸ்கூலில் தான் சேர்க்க வேண்டும்" என்றாள் பவானி.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.