சேஷாத்திரி மூர்த்தியைக் கவனித்தார்.
"ஏண்டா ! நீ கல்யாணத்தின் மருமகன் தானே? உனக்கு கல்யாணம் ஆயிற்றோ ?" என்று விசாரித்தார்.
"இல்லை சார்" என்றான் மூர்த்தி.
"என்னடா இல்லை? என் பெரிய பிள்ளை ராமுவின் ஈடுடா நீ. அவனுக்கு நாலு குழந்தைகள் இருக்கிறார்கள். நீ பிரம்மச்சாரியாய் ஊரைச் சுற்றிக் கொண்டு, வரட்டும் அந்தக் கல்யாணம்! ‘உன் மருமகன் என்னடா பச்சைக் குழந்தையா?' என்று கேட்கிறேன்."
”கேளுங்கள் சார்" என்றான் மூர்த்தி கைக்குட்டையினால் வாயைத் துடைத்துக் கொண்டு.
*கேட்கிறேண்டா! கேட்கிறதோடு விட மாட்டேன் என் பேத்தி ஒருத்தி இருக்கிறாள். பத்தாவது படித்திருக்கிறாள். வீட்டு வேலைகளும் செய்யத் தெரியும். அவளை உனக்கு முடிச்சுப் போட்டு விட்டுத்தான் மறு வேலை. ஆமாம்..." என்றார் அவர். பிறகு ”ஜாதகம் கீதகம் இருக்கிறதா! இல்லை கிழித் தெறிந்து விட்டாயா!" என்று கேட்டார்.
மூர்த்தி ஊஞ்சல் பலகையிலே இருந்த ஆப்பிள் ஒன்றை எடுத்துச் சாவிக் கொத்தில் இருந்த பேனாக் கத்தியால் சீவித் துண்டங்களாக நறுக்கிக் கொண்டிருந்தான். சிறிது நேரம் பதில் கூறாமல் இருந்தால் எதிரே இருப்பவர் தானாகவே எழுந்து போய் விடுவார் என்று எதிர்பார்த்துத் தான் அவன் மௌனமாக இருந்தான். சேஷாத்திரி இவனுடைய அலட்சியத்தை மதிப்பவராக இல்லை.
"என்னடா. பதில் பேச மாட்டேன் என்கிறாய்? பம்பாய், கல்கத்தா எல்லாம் போயிருந்தாயே, அங்கே யாரையாவது ரிஜிஸ்தர் கலியாணம் செய்து கொண்டு விட்டாயா என்ன?"
மூர்த்தி தலை நிமிர்த்தி அவரைப் பார்த்தான். "அப்படித்தான் வைத்துக் கொள்ளுங்களேன். சார்! சீர்திருத்தம் என்று வாயால் பேசி விட்டால் போதுமா! செய்கையாலும் காட்டித் தானே ஆக