வேண்டும்?"
"ஓ! அப்படியா? நீ பெரிய சீர்திருத்த வாதியோ? சீர்திருத்தம் பண்ணுவதிலும் நேர்மையும் உண்மையும் இருக்க வேண்டும் அப்பா. அதிலே சுயநலம் கலந்து விட்டால் அப்புறம் உருப்பட்டாற் போலத்தான்!" என்றார் அவர் சற்று காரமாகவே. மூர்த்தியின் முகம் கோபத்தால் சிவந்தது.
”சார்! எதையோ பேச வந்து சம்பந்தமில்லாமல் பேசுகிறீர்கள். நீங்கள் இங்கே வந்ததே வேறு விஷயம். அநாவசியமாக என்னை வம்புக்கு இழுக்காதீர்கள்..."
சேஷாத்திரி துள்ளி எழுந்தார்.
"என்னடா பிரமாதமாக அவசியத்தையும் அநாவசியத்தையும் கண்டு விட்டாய்? உன்னைப்பற்றி எனக்குத் தெரியுமடா! மேட்டுத் தெருவில் இருந்தாளே பாலம்பாள். அவள் பெண்ணிடம் நீ எப்படி நடந்து கொண்டாய்? அந்தப் பெண்ணின் கல்யாணத்தின் போது என்ன வெல்லாம் கடிதமாக எழுதினாய் என்றெல்லாம் எனக்குத் தெரியும்! எனக்குத் தெரிந்து பிறந்த பையன் நீ! சீர்திருத்தத்தைப் பற்றிப் பேச வந்து விட்டான்!"
பவானி அப்படியே நின்றவள் நின்றவள் தான்!
மேட்டுத்தெரு பாலம்மாளின் பெண்ணிடம் மூர்த்தி நடந்து கொண்ட விதம் என்ன என்கிற விவரம் பூராவும் பவானி அறிந்து கொள்ள ஆசைப்படவில்லை. மாங்காயை ஒரு ஓரத்தில் கடித்தவுடன் புளிப்போ இனிப்போ உடனே தெரிந்து போகிறது.
சே! இவன் இவ்வளவு தானா? என்று அவள் தீர்மானித்து மூர்த்தியைப்பற்றி எடை போட்டுத்தான் வைத்திருந்தாள். அந்தத் தீர்மானம் ஏகமனதாக அவள் இதயத்திலே நிறைவேறிற்று.
பாலு வந்து இடையில் கல்யாணமும் பார்வதியும் வந்து விட்ட செய்தியைச் சொல்லாமல் இருந்திருந்தால் அந்தக் கிழவர் சேஷாத்திரியும், இளைஞன் மூர்த்தியும்