"நான் அப்படி நினைக்கவில்லை. பகவான் எனக்குச் சொத்தையும் கொடுத்து, சந்ததியையும் தரத்தான் உங்களைச் சென்னையிலிருந்து கிளப்பி ராமப்பட்டணத்துக்குக் கொண்டு வந்து சேர்த்தான்னு நம்பறேன்."
"நீங்க என்ன சொல்றீங்க?" என்றாள் காமாட்சி. அவளுக்கு ஆனந்தத்தில் அந்தரத்தில் மிதப்பது போல் இருந்தது. சுந்தரி கமலாவைக் கொடுத்துப் பதிலுக்கு இத்தனை சொத்துக்களை ஆண்டு அனுபவிக்கப் போகிறோமா? அப்படி ஓர் அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறதா மாசிலாமணி குடும்பத்துக்கு? விசுப் பயல் அவ்வளவு கொடுத்து வைத்தவனா?
"இன்னும் தெளிவா நான் எப்படிப் பேசறது? என் பெண்ஜாதி காலமாகிப் பத்து வருஷமாச்சு. அப்போ பாலியமாகத்தான் இருந்தேன். எத்தனையோ பேர் சொன் னாங்க. 'மறுபடியும் கல்யாணம் செய்து கொள்' என்று. பிடிவாதமாக மறுத்து விட்டேன். அந்த உத்தமி இருந்த இடத்திலே இன்னொருத்தியைக் கொண்டு வந்து வைக்க மாட்டேன்னு தீர்மானமா யிருந்தேன்..."
"அடடா! எத்தனை தங்கமான மனசு!" என்றாள் காமாட்சி.
"ஆனால் இப்பத்தான் கொஞ்ச நாட்களாக மனசு சஞ்சலப்படுகிறது. இவ்வளவு சொத்தையும் கட்டி ஆள ஒருத்தரும் இல்லையே என்று கவலைப்படுகிறது. தர்மத்துக்கு எழுதி வைச்சுடலாம். பெரிய காரியமில்லே. இருந்தாலும் நமக்கு வேணும்கிறவங்க நாலு பேர் இருந்து, அவங்க நாம் சம்பாதிச்சதை யெல்லாம் அனுபவித்தால் அதிலே கிடைக்கிற நிம்மதி அலாதிதான்."
"இப்போகூட உங்களுக்கு அப்படி என்ன வயசாகிவிட்டது? ஐம்பது இருக்கலாம். ஆனால் நாற்பதுதான் மதிக்கத் தோன்றும். ஜாம் ஜாம் என்று கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டியதுதான்!"
"அறுபத்திரண்டு ஆகிறது. ஆனால் நீங்க சொன்ன மாதிரி நாற்பது இல்லே, முப்பத்தெட்டுன்னு மதிப்புப் போட்டவங்களும் உண்டு. அது கிடக்கக் கல்யாணம் என்ற எண்ணமே எனக்கு இதுவரையில் ஏற்பட்டதில்லை. இப்பத்தான் அதுவும் உங்க பெண் கமலாவைப் பார்த்த