பிறகுதான்... மனசை விட்டுச் சொல்கிறேன்... நீங்க தப்பா நினைக்கக் கூடாது. உங்களை நான் கட்டாயப் படுத்தவில்லை. நீங்க நன்றாக யோசித்துச் சொன்னால் போதும்!"
"ஆகட்டும் யோசிக்கிறோம்" என்றார் மாசிலாமணி.
"யோசிக்கிறது என்ன, யோசிக்கிறது. சற்று முன்னால் நீங்கள் சொன்னீங்க, 'எங்களைச் சென்னையிலேயிருந்து கிளப்பி இங்கே ஆண்டவன் கொண்டு வந்து சேர்த்தான்' என்று. அது ஆயிரத்தில் ஒரு வார்த்தை. மெய்யாலுமே இது கடவுள் சித்தம்தான். இல்லாத போனால் எப்படி இவர் சொந்த ஊரான கிராமத்துக்குப் போய், இவர் அண்ணாவுடன் தங்க வேண்டிய வங்க இங்கே வந்து சேர்ந்திருப்போம். சொல்லி வைத்தாற் போல் இந்த ஊர் அருகில் வரும் போது பஸ் ஏன் ரிப்பேராக வேண்டும். அதுதான் போகட்டும். அந்தப் பிள்ளை கல்யாணம் எங்களைப் பார்த்து விட்டு, நேரே உங்க வீட்டிலேயே கொண்டு வந்து ஏன் இறக்கினான்?
காலியாக இருக்கிற வேறு யார் வீட்டுக்காவது அழைத்துப் போயிருக்கக் கூடாதா? இதையெல்லாம்தான் தெய்வ சங்கல்பம் என்று சொல்கிறது.
"அவசரப்பட வேண்டாம். கமலாவையும் கலந்து ஆலோசியுங்கள். கணவரையும் கேட்டுக் கொள்ளுங்கள்" என்றார் ரங்கநாதன். "கமலாவின் சம்மதம் இல்லாத போனால் பிரயோஜனமில்லை. அவளைக் கட்டாயப் படுத்த நான் ஒப்ப மாட்டேன். ஆனால் ஒன்றுமட்டும் சொல்கிறேன். எனக்கு இந்த ஊரிலே ஆறு வீடுகள் இருக்கின்றன; நாலு காணி நன்செய் நிலம். பாங்கில் ரொக்கமாக மூன்று லட்சம். அப்புறம் இந்த வீடு, இதிலுள்ள ஐசுவரியங்கள் - இவ்வளவையும் ஆள ஒரு கிருகலட்சுமி இல்லையே என்று எனக்கு ரொம்பக் குறை. அதையும் இப்போ சமீபத்தில்தான் உணர ஆரம்பித்திருக்கிறேன். இருந்தாலும் கமலாவின் சம்மதமில்லாமல் எதுவும் நடக்கக் கூடாது."
"நன்றாயிருக்கிறது. இதைப் பற்றி அவளைக் கேட்கப் போவானேன்? அவள் சிறு பெண். அவளுக்கு என்ன தெரியும். பாவம்! நாம்தான் நல்லது கெட்டது எடுத்துச் சொல்ல வேண்டும். நாம் ஒரு நல்ல முடிவுக்கு வந்து விட்டால் அவளும் பேஷாகச் சரி என்கிறாள். மாட்டேன் என்றா சொல்லப் போகிறாள்?"