"அப்படி இல்லை, அம்மா. இந்தக் காலத்திலே பெண்கள் தங்கள் உரிமைகளை உணர ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படியே அவர் களுக்குத் தெரியவில்லை என்றாலும் ஊரிலே இருக்கிற விடலைப் பயல்கள் - சமூக சேவை அது இது என்று நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்களே அவர்கள் - சும்மா இருக்க மாட்டார்கள். ஏதாவது கிளப்பி விட்டு அவள் மனசைக் கலைத்து வேடிக்கை பார்ப்பார்கள் .... இருக்கட்டும் வந்தது வந்தீர்கள். இந்த நகைகளை ஒரு பார்வை பார்த்து விட்டுப் போங்கள். நீங்க கலை உள்ளம் கொண்டவர்கள். சிறந்த வேலைப் பாட்டை ரசிக்கக் கூடியவர்கள். அதனால் காட்டுகிறேன். என் பெருமையை உணர்த்துவதற்காக இல்லை."
"ஆமாமாம். சிறந்த கலை வேலைப்பாடு என்றால் நான் உயிரையே விட்டு விடுவேன்" என்றாள் காமாட்சி.
அவர் பீரோவைத் திறந்தபடியே, "இந்தக் காலத்தில் பெண்களின் இஷ்டமின்றி ஒரு காரியமும் செய்வதற்கில்லை" என்றார்.
பீரோவுக்குள் தகதகத்த நகைகளை அகன்று விரிந்த கண்களால் பார்த்துத் திகைப்பினைமென்று விழுங்கியபடியே, "ஏன் இஷ்டமில் லாமல் இருக்கணும்? எல்லாவற்றையும் என்னிடம் விட்டு விடுங்கள். உங்க இஷ்டம் போலவே நடத்தி விடுவோம். உங்க இஷ்டந்தான் கமலாவின் இஷ்டமும்" என்றாள் காமாட்சி.
ரத்தினமும் வைரமும் மாறி மாறிப் பதித்த ஓர் அட்டிகையை எடுத்து உள்ளங்கையில் வைத்து எடை பார்ப்பதுபோல் கரத்தை அசைத்த ரங்கநாதன், "நம்ம இஷ்டத்திலே என்ன இருக்கு? எல்லாம் ஆண்டவன் விருப்பம் எப்படியோ அப்படி நடக்கும்" என்றார்.
"உங்களைப் போன்ற நல்ல இதயம் படைத்தவர்களின் இஷ்டத்துக்கு மாறாக ஆண்டவனின் விருப்பம் இருக்குமா என்ன? ஒருநாளும் இராது!" என்றாள் காமாட்சி, வியர்த்த உள்ளங்கையைப் புடவையில் தடவியபடி.
"அடுத்த முறை நம்ம வீட்டுக்கு வரும் போது கமலாவையும் அழைத்துக் கொண்டு வாங்க. அவள் இதைப் போட்டுக் கொண்டு வரட்டும்" என்று ரங்கநாதன், தயாராக நீண்ட காமாட்சியின்