"பெரிய வக்கீலாயிற்றே, வாதாடாமல் இருப்பீர்களா? அவரும் ரொம்பப் பெரிய வக்கீல். எனவே, உங்கள் வாதத் திறமையில் சொக்கித்தான் போயிருப்பார்."
"கமலா! நீ இப்படியெல்லாம் பேசுவதானால் நான் உடனேயே திரும்பிப் போகிறேன்."
"ரொம்ப சரி, போய் வாருங்கள். நானும் விடைபெற்றுக் கொள்கிறேன்."
"நீ எங்கே போகப் போகிறாய்?"
"எமலோகப் பட்டணத்துக்கு!"
"இது என்ன உளறல் கமலா?"
"உளறுவது என்ன, வழக்கறிஞர்களின் ஏகபோக உரிமையா? நானும்தான் உளறி விட்டுப் போகிறேனே?"
"அப்படியானால் ரொம்ப சந்தோஷம். நிறைய உளறு. ஆனால் உளறியபடியே செய்து மட்டும் விடாதே!"
"செய்து பார்த்தால் மட்டும் நினைத்தது நிறைவேறி விடுகிறதா? கிணற்றில் விழுந்து சாக நினைத்தேன். முயன்றும் பார்த்தேன். கல்யாணம் வந்து காப்பாற்றி விட்டார். இங்கே பள்ளத்தாக்கில் விழுந்தாலாவது உயிர் போகுமா என்று பரீட்சித்துப் பார்க்க எண்ணினேன். நீங்கள் தடையாக வந்து சேர்ந்து விட்டீர்கள்."
"நல்ல வேளையாகப் போயிற்று" என்றாள் பவானி. பிறகு, "கமலா, இப்படி நீ கோழையாகி விடாமல் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளப் போராட வேண்டும்" என்றாள். "அர்த்தமுள்ளதாக மட்டும் இல்லை அக்கா, லட்சிய வாழ்வாகவே அமையப் போவதாகக்கூட எண்ணினேன். சிறுமியாக இருந்தபோதிலிருந்தே எது எதற்கெல்லாமோ ஆசைப்பட்டேன். எல்லாம் பகற்கனவாக முடிந்து போயிற்று."