பக்கத்தில் தப்பி ஓடிய கைதி ஒருவன் வளைய வருகிறானாம். சில சி.ஐ.டி.கள் அவனைத் தேடிக் கொண்டிருகிறார்களாம். கல்யாணம் அவர்களிடம் அந்தக் கைதியின் புகைப்படம் இருப்பதைக்கூடப் பார்த்திருக்கிறார். அந்தக் கைதியிடம் நீ அகப்பட்டுக் கொண்டால் என்ன ஆவது?...."
"ஆவது என்ன அக்கா? அந்தக் கைதியைப் பார்த்து, 'ஏ, கைதியே! உன்னைப் போல் ஓர் அசடு கிடையாது; சிறையிலிருந்து தப்பி வந்தால் சுதந்திரம் என்று நினைத்தாயா? இப்போது சி.ஐ.டி.க்களுக்குப் பயந்து பதுங்கிப் பதுங்கி வாழ்வதிலே என்ன சுதந்திரம் இருக்கிறது?' என்று கேட்பேன். பிறகு நானும் ஒரு கைதிதான் என்று என்னை அவனுக்கு அறிமுகம் செய்து வைப்பேன். 'நீ ஜெயில் கைதி, நான் வீட்டுக் கைதி. நீ அரசாங்கச் சிறையிலிருந்து தாற்காலிகமாகத் தப்பி இங்கு வந்தாய். நான் வீட்டுச் சிறையிலிருந்து தாற்காலிகமாகத் தப்பி இங்கு வந் திருக்கிறேன்' என்பேன். ஒரு கைதி மற்றொரு கைதியிடம் காண்பிக்க வேண்டிய நியாமமான பரிவையும் அன்பையும் அவனிடம் நான் காட்டுவேன்."
"அப்படியானால் போலீஸிடம் அவனைக் காட்டிக் கொடுத்துவிட மாட்டாய்?"
"சேச்சே, ஒரு நாளும் மாட்டேன். அது இனத் துரோகம்!"
"அப்படியானால் ஒன்று செய், கமலா! அந்தக் கைதியைக் காண நேர்ந்தால் அவனுக்கு உதவுவதாகச் சொல்லு. அவன் மறை விடத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்டு என்னிடம் வா. இருவருமாக அவனுக்கு நம்மால் இயன்ற உபகாரத்தைச் செய்யலாம்."
"ஐயையோ! உங்களை வேறு இதில் எதற்கு இழுத்து மாட்டி வைக்க வேண்டும், அக்கா? கைதிக்கு உதவுவது குற்றமாயிற்றே!"
"நான் ஒரு வக்கீல் என்பதை மறந்து விட்டாயா, கமலா? சட்டபூர்வமாகவேகூட அவனுக்கு நான் உதவ முடியும். ஒருவேளை அவன் நிரபராதியாக இருந்து அவனுக்கு என்னால் விடுதலை பெற்றுத் தரவும் முடிந்தால் நான் எவ்வளவு புகழும் பிராபல்யமும் அடைவேன்! அது என் முன்னேற்றத்துக்கு ரொம்பவும் வசதி செய்யும் இல்லையா?"
"அடேடே, ஆமாம்! எனக்கு இது " என்று பதறினாள்.