"ஆனால் அக்கா உங்களிடம் வெட்கத்தை விட்டுச் சொல்வதற்கு என்ன? கல்யாணத்தைச் சந்தித்த வினாடியில், படிக்கவில்லையே, பெரிய உத்தியோகம் பார்க்கவில்லையே என்ற என் ஏக்கங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டன. 'படிப்பாவது, பதவியாவது? யாருக்கு வேண்டும்? இவ்ருக்குப் பணிவிடை செய்துகொண்டு இவர் காலடியிலேவிழுந்து கிடக்கிற பாக்கியம் கிடைத்தால் போதாதா?' என்று தோன்றியது. இந்த மாறுதலை என்னாலேயே புரிந்து கொள்ள முடியவில்லை!"
"இதில் ஒன்றும் அதிசயம் இல்லை, கமலா! காதல் இதை விடப் பெரிய தியாகங்களுக்கெல்லாம் நம்மைத் தயார்படுத்தக் கூடியதுதான்" என்றாள் பவானி.
"அது எப்படி உங்களுக்குத் தெரியும்? நீங்களோ கல்யாணத்தை விரும்பவில்லை. அப்படியானால் வேறு யாரைக் காதலித்து அவருக்காக என்ன தியாகத்தைச் செய்தீர்கள்?"
"அதைப் பற்றி நான் பேசுவ தற்கில்லை, கமலா. அது இன்னொருவர் ரகசியம்" என்றாள் பவானி.
"அப்படியானால், அக்கா! உங்கள் நிலைமை என்னுடையதைவிட மோசமானதுதான். நானாவது மனம் விட்டுப் பேசி உங்களுடன் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். உங்களால் அதுவும் முடியவில்லையே?"
"ஆக, உன்னைவிடத் துரதிர்ஷ்டசாலிகள் உலகில் இருக்க முடியும் என்று தெரிகிறதல்லவா?
அப்படியிருக்கும்போது மனம் தளர்ந்து போய் உயிரை விடுவது பற்றியெல்லாம் யோசிக்கலாமா? வா, போகலாம்" என்று பவானி எழுந்திருந்தாள். குனிந்து கமலாவுக்குக் கைகொடுத்து அவளையும் நிற்க வைத்தாள்.
காரில் திரும்பும்போது சற்றுநேரத்துக்குப் பிறகு, திடீரென்று நினைத்துக் கொண்டவள் போல் பவானி கேட்டாள். "அது சரி, என் துணைகூட இல்லாமல் நீ இங்கே அடிக்கடி வருகிறாயா என்ன? ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் ! உனக்குத் தெரியுமோ, என்னமோ, இந்தப்