"அந்தக் கதைகளைத்தான் சொல்லேன், கேட்போம்" என்றாள் பவானி.
"அக்கா! ஒரு நாள் நாங்கள் கடற்கரைக்குப் போயிருந்தோம். காற்று வாங்கத்தான். ஆனால் அங்கே நாங்கள் எதிர்பாராதவாறு காங்கிரஸ் பொதுக்கூட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. ஒரு பிரசங்கி - அவர் பெயர் கூட இந்தப் படிப்பறிவற்ற மூடத்துக்கு நினைவில்லை - சுதந்திரம் சீக்கிரமே வரும் என்றும் அதற்கு முன்பாகவே அதனை வரவேற்க நம்மை நாமே தயார்ப் படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் சொன்னார். சமூக மாறு தல்கள் பல ஏற்பட வேண்டும் என்றார். பெண்களுக்குச் சம உரிமைகள் தரப்பட வேண்டும். தீண்டாமை ஒழியவேண்டும், ஜாதி வித்தியாசங்கள் போக வேண்டும். விதவா விவாகங்கள் நடக்க வேண்டும் என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போனார். அவற்றுள், 'பெண்கள் ஆண்களுக்குச் சமமாக மட்டுமின்றி அவர்களைவிடச் சிறந்தவர்களாகவே பல துறைகளில் பிரகாசிக்க வேண்டும்' என்று அவர் கூறியது என் மனத்தில் ஆழப் பதிந்து விட்டது. சரோஜினி தேவி, விஜயலட்சுமி பண்டிட், அன்னி பெசண்ட், ராஜகுமாரி அமிர்தகௌர் என்று அவர் பல பெயர்களை அடுக்கினார்.
அந்த நிமிஷத்தில் நான் பெரிய படிப்புப் படித்து விஞ்ஞானியாகவோ, டாக்டராகவோ நாடு போற்றும் நிலையில் உயரப் போவதாகக் கற்பனை செய்து கொண்டேன். அதெல்லாம் வெறும் கற்பனையாகி விட்டது. எனக்குப் படிப்பு வரவில்லை என்பதால் எட்டாவதுடன் நிறுத்திவிட்டதாக அம்மா சொல்வாள். அது உண்மையில்லை அக்கா. நான் எல்லாவற்றிலுமே நூற்றுக்கு நூறு வாங்கி விடவில்லை. ஆனால் நான் மக்காகவும் இருந்ததில்லை. 'வயதுக்கு வந்த பெண்ணைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவ தாவது' என்று சொல்லி அம்மா தடை விதித்து விட்டாள். 'பெண்ணுக்கு எதற்குப் படிப்பு? குடும்பப் பாங்காக இருக்கத்தான் கற்றுக் கொள்ள வேண்டும், அதுதான் முக்கியம்' என்றெல்லாம் சந்தர்ப்பத்துக்கு ஏற்ற படி பேசுவாள். அக்கா! நீங்களே சொல்லுங்கள், நான் உங்களைப் போல் பிரகாசிக்கா விட்டாலும் படித்துப் பட்டம் பெற்றிருந்தால் அவர் என்னை இப்படி அலட்சியப்படுத்து வாரா?" கமலா நாத் தழுதழுக்கக் கேட்டாள்.
"இப்போதுகூட கல்யாணம் உன்னை அலட்சியப்படுத்தவில்லையே?" என்றாள் பவானி." நீ கல்லூரியில் படித்திருந்தால் இன்றுள்ளதை விட அதிகமாக உன்னிடம் அவருக்கு மதிப்பு உண்டாகலாம். ஆனால் காதல், கல்யாணம் என்பதெல்லாம் வேறு விஷயம் அல்லவா?"