விட்டேன். அதை மறந்து விடுங்களேன்; பிளீஸ்!" என்றாள் கமலா.
"ஒரு நாளும் மறக்க முடியாது! எப்படி மறக்கும்? சாமானிய விஷயமா இது?"
"இதோ பாருங்கள், ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு ரகசியம் இருக்கும். அதற்காக அவர்களைத் தவறாக எண்ணக் கூடாது. இப்போ என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். என் வாழ்க்கையிலும் கூட ஒரு ரகசியம் இருக்கத்தான் செய்கிறது."
கல்யாணம் தூக்கிவாரிப் போட்டதுபோல் அவளைத் திரும்பிக் கூர்மையாகப் பார்த்தான். "ஆ! என் அம்மா கூறியது நிஜம்தானா? 'வாயைக் கழுவிக் கொண்டு வா' என்று அவளிடம் சீறினேனே நான்; அது தான் தப்பா?"
"ஐயோ! நான் அதைச் சொல்லவில்லை. அது முழுப் பொய்!" என்று அலறினாள் கமலா. "ஊரிலே வேலையற்ற விடலைகள் நாலு பேர் கட்டிவிட்ட கதை. என்னைப் பார்த்தால் அவ்வளவு கேவலமானவளாகவா தோன்றுகிறது, உங்களுக்கு?" நெஞ்சு வெடித்துவிடும் போல் அவன் கால்களைக் கட்டிக் கொண்டு அழுதாள் கமலா.
கல்யாணத்தின் உள்ளத்தில் கருணை பொங்கியது. "இல்லை, கமலா! நான் அதை நம்பவேயில்லை. 'பணத்துக்கு ஆசைப்பட்டு ஊர் ஊராகப் போய்க் கிழவர்களாகப் பார்த்துக் கல்யாணம் செய்து கொள்வதே உனக்குக் காரியம்' என்று கடவுளே என் எதிரில் வந்து சொன்னாலும் நான் நம்ப மாட்டேன்." அவன் குனிந்து அவள் தோள்களைப் பற்றி எழுப்பிக் கைக் குட்டையால் அவள் கண்ணீரைத் துடைத்தான். "கபடமில்லாத இந்தக் கண்கள், மாசு மறுவற்ற இந்த முகம், அவமானம் தாங்காமல் துவளும் இந்த உடல் எல்லாம் எனக்கு உண்மையை உணர்த்து கின்றன கமலா....ஆனால்......வேறு என்ன ரகசியம் இருக்கமுடியும் உன் வாழ்க்கையில்?"
"வந்து....வந்து...." விசும்பலுக்கிடையில் வார்த்தைகள் வெளிப்பட மறுத்தன.
"சொல்லு, கமலா!" அவன் ஆதரவாக அவள் முதுகைத் தடவினான்.
"நான் ....நான்....எனக்கு...."