இப்படி நாள் கணக்கில் இந்த அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தால் மனசு தான் என்னத்திற்கு ஆகும்?" என்று அழைத்தாள்.
கோமதிக்கு முதலில் அலுப்பாகவும் வேண்டா வெறுப்பாகவும் இருந்தது. பவானி சொல்லுகிறாளே என்று நினைத்துக் கீழே இறங்கி வந்தாள்.
கூடத்தில் ரேடியோ மேஜை மீது முன்னைப் போல் பத்திரிகைகளும் கிழிந்த துணிகளுமாக இராமல் துப்புரவாக வைக்கப்பட்டிருந்தது. அதற்கடுத்த பூஜைக் கூடத்திலிருந்து மலர்களின் நறுமணம் ’கம்' மென்று வீசியது. பலவித மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகளைப் படங்களுக்குச் சாத்தி இருந்தாள்.
அந்த வீட்டில் சமையலுக்கு ஆள் கிடையாது. மாதத்தில் அநேக நாட்கள் ஹோட்டலிலிருந்து எடுப்புச் சாப்பாடு வந்து விடும். அதைக் குழந்தைக்குப் போட்டுத் தானும் சாப்பிடவே கோமதிக்கு அலுப்பாக இருக்கும். மின்சார அடுப்பில் காலையில் பாலைக்காய்ச்சி, தானே காட்பி போட்டுக் கொண்டு விடுவான் நாகராஜன். மனைவி எழுந்து போட்டுக் கொடுக்க வேண்டும் என்று காத்திருக்க மாட்டான். அவள் படுக்கையை விட்டு எழுந்து வருவதற்குக் காலை சுமார் ஏழு மணி ஆகும். பால்காரன் பாலைக் கறந்து வைத்து விட்டுப் போய் விடுவான். வேலைக்காரி சுமதிக்குத் தலைவாரிப் பின்னி குளிப்பாட்டி உடை அணிவித்து விடுவாள். சில நாட் களி வேலைக்காரி கொடுக்கும் ஆகாரத்தைச் சாப்பிட்டு சுமதி 'கான்வெண்டு'க்குப் போய் விடுவாள். தலை வாரிப் பூச்சூட்டி, மை தீட்டிப் பொட்டிட்டு மகிழ வேண்டிய தாய் உள்ளம் உறங்கிக் கிடந்தால், அந்தக் குழந்தையின் வளர்ச்சியைப் பற்றி என்ன சொல்ல முடியும்?
கோமதி சுபாவத்தில் கொஞ்சம் நோயாளி. 'நோய் பீடிப்பது உடலையே தவிர உள்ளத்தை அல்ல' என்று அதை உதறித் தள்ளும் சுபாவத்தைப் படைத்தவள் அல்ல, தலையை வலிக்கிறதா? அது சாதாரணத் தலைவலி என்று இருந்து விடமாட்டாள். நரம்புத் தளர்ச்சியினால் வந்த தலைவலியா ‘மெனிஞ்ஜைடிஸ்’ என்கிற பயங்கர வியாதியின் ஆரம்பமா என்றெல்லாம் மண்டையைப் பிளந்து கொள்வாள். வீட்டில் ’போன்' இருந்தது. தானாகவே ’போன்' செய்வாள் டாக்டருக்கு.
”தலைவலிதானே? சூடாகக் காப்பி சாப்பிடுங்கள். குளிர்ந்த காற்றில் உலாவுங்கள், சரியாகி