"ஒண்ணுமில்லீங்க, ஏதோ உ.டம்பு சரியில்லையாம். வரச் சொன்னாங்க" என்பான் வேலையாள்.
"பேசிக் கொண்டு நடமாடிக் கொண்டு தானே இருக்காங்க?"
”ஆமாங்க, இன்னிக்கு எங்க சம்பளம்கூட அம்மா தான் குடுத்தாங்க"
ஸ்ரீதரன் மனதுக்குள் சிரித்துக் கொண்டு, ”வரேன் என்று சொல்லப்பா" என்று அவனை அனுப்பி விடுவார். அன்று போக மாட்டார். நாலு தினங்களுக்கு அப்புறம் தான் போய்ப் பார்த்து வருவார்.
இப்படித்தான் ஒரு மாசத்துக்கு முன்பு இரவு இரண்டு மணிக்கு நாகராஜன் டாக்டரைக் கூப்பிட்டான் போனில்.
”ரொம்பவும் ஆபத்தாக இருக்கிறது. மயக்கம் தான். கருச்சிதைவு என்று நினைக்கிறேன். என்ன செய்வது?" என்று கேட்டான்.
"கருச்சிதைவா? நான் எதிர்பார்த்தேன் மிஸ்டர் நாகராஜன் உங்கள் மனைவிக்கு உடல் உழைப்பு போதாது. கர்ப்ப ஸ்திரீகள் உட்கார்ந்த இடத்தை விட்டு நகராமல் இருப்பது நல்லதில்லை. அதே சமயத்தில் அதிகமாக உடம்பை அலட்டிக் கொள்ளவும் கூடாது இப்பொழுது என்ன செய்வது? ஆசுபத்திரிக்குப் போன் பண்ணுகிறேன். ’அட்மிட்' செய்து விடுங்கள்" என்றார்.
அதற்கப்புறம் தான் வீடு இருக்கும் அவல நிலையைப் பார்த்து நாகராஜன் பவானியை வரவழைத்தான். அவள் வந்த பிறகு வீட்டிற்கு ஒரு அழகு. சோபை எல்லாமே வந்து விட்டது. இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை' என்பார்கள். அந்த இல்லாளும் அமைய வேண்டிய முறையில் அமைந்தால் தான் உண்டு. இல்லாவிட்டால் அந்த வீட்டில் ஆசை. அன்பு, காதல். இன்பம் ஒன்றுமே இல்லைதான்!
தன்னுடைய மன்னி இப்படி ஏன் இருக்கிறாள் என்று வியந்தாள் பவானி.
கொல்லையில் சென்று கால் அலம்பிக் கொண்டு வந்த கோமதி கூடத்து சோபாவில் சென்று