எதற்காவது போனதுண்டா? நீங்கள் திருவல்லிக்கேணியில் மெரினாவுக்கு ஒருநாள் போயிருக்கிறீர்களா? ப்ரிஜிடேரும், சிரிஜிடேரும் யாருக்கு வேண்டும் இங்கே?" என்று பேசினாள் கோமதி.
நாகராஜன் சிரித்தான்.
"அடேடே! வக்கீல் வேதாந்தம் தம் ப்ராக்டினை விட்டு விட்டாராம். அவருக்குப் பதிலாக நீ போகிறாயா கோர்ட்டுக்கு? எல்லா வேலைகளுக்கும் தான் நீங்கள் போகலாமே இந்தக் காலத்தில் !" என்று கேட்டான்.
மறுபடியும் மனைவியிடம் அவன் பிடிவாதம் தோற்றது. அன்று அவர்கள் சுமதி, பாலு இருவரையும் அழைத்துக் கொண்டு சினிமாவுக்குப் போனார்கள்.
தெருவில் கார் வந்து நின்றது. ஸ்ரீதரன் இறங்கி உள்ளே வந்தார். கூடத்தில் பவானி மட்டும் உட்கார்ந்திருந்தாள். டாக்டரைப் பார்த்ததும் எழுந்து நின்று உள்ளே வரும்படி அழைத்தாள்.
ஸ்ரீதரன் உள்ளே வந்து சோபாவில் உட்கார்ந்து கொண்டார். சிறிது நேரம் வரையில் பேசாமல் இருந்து விட்டு "எங்கே ஒருத்தரையும் வீட்டில் காணோம்?" என்று கேட்டார்.
"அண்ணாவும் மன்னியும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு சினிமாவுக்குப் போயிருக்கிறார்கள்."
”பாலு எப்படி இருக்கிறான்? முன்னைப் போல அவன் எங்கள் வீட்டுக்குக் கூட அடிக்கடி வருவதில்லை. பெரியவனாகி விட்டான் இல்லையா?" என்று விசாரித்தார் அவர்.
”ஆமாம், அவன் பசுமலையில் இருந்த போது என்னை என்ன பாடுபடுத்தி வைத்தான்! சதா சண்டை தான். இப்பத்தான் ஒரு வருஷமாக ரொம்பவும் சாதுவாகப் போய் விட்டான். படிப்பில் அக்கறை ஏற்பட்டிருக்கிறது."
"வயசாகிக் கொண்டு வருகிறது பாருங்கள். இனிமேல் புத்திசாலியாக மாறவேண்டியது தானே" பவானிக்கு டாக்டர் ஸ்ரீதரன் தன் மகனைப் புத்திசாலி என்று கூறியதில் ஆனந்தம் ஏற்பட்டது.