லட்சியமாக இருப்பதால் தான்..."
பவானி பணிவுடன் எழுந்து நின்றாள். "டாக்டர்! அன்றொரு நான் என்னிடம் ஏதோ பேச ஆசைப் படுவதாகக் கூறினீர்கள் ....."
”அதைத் தான் கேட்க வந்தேன் அம்மா. நாகராஜனிடமே இதைப் பற்றிக் கேட்க இருந்தேன். அவர் ஊரிலேயே இருப்பதில்லை. ராதாவின் கல்யாணத் தன்று அவரைப் பார்த்தேன். மறுபடி பார்க்க முடியவில்லை. சுமதிக்கு ஜுரம் வந்த போது நீங்கள் நர்ஸாகப் பணி புரிந்தது என் மனத்தை விட்டு நீங்கவில்லை. தமையன் குழந்தையைக் காப்பாற்றி விட்டீர்கள். ஆனால் இம் மாதிரியான சேவையைப்பெற எத்தனையோ குழந்தைகள், பெரியவர்கள், தாய்மார்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் ஏன் ’நர்ஸ்' தொழிலுக்குப் படிக்கக் கூடாது?"
ஸ்ரீதரன் தாம் சொல்ல வந்ததைச் சொல்லி விட்டார் பவானி கொஞ்ச நேரம் மெளனத்தில் ஆழ்ந்திருந்தாள்.
தமையனின் குலவிளக்கு அணையாமல் இருக்க வேண்டும் என்று அன்று நினைத்தாள் அவள். அம்மாதிரி எத்தனை குலவிளக்குகள், தாய்மார்கள். குடும்பத் தலைவர்கள் ஆஸ்பத்திரிகளில் வியாதியுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள்? ஒவ்வொருவரும் உயிர் வாழ வேண்டும் என்ற ஆசையிலே நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அவர்களுக்குச் சேவை செய்வது எவ்வளவு மகத்தானது என்று சிந்தித்துப் பார்த்தாள் பவானி.
"டாக்டர்! அண்ணாவிடம் கேட்டுச் சொல்கிறேன் . அதற்கும் நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டாள் அவள்.
டாக்டர் ஸ்ரீதரன் காரில் வீட்டுக்குத் திரும்பும் போது மன நிறைவுடன் திரும்பினார். பவானியைப்பற்றி ஓர் உயர்ந்த எண்ணம் அவர் மனத்தில் ஏற்பட்டது.
--------------
தொடரும்...