”குழந்தை அப்பா ......" என்றாள் காமாட்சி. "அது தெரிகிறது. இது யார் குழந்தை அம்மா?" என்று கேட்டார் ஆச்சரியத்தால் தம் கண்கள் மலர.
”நம் வீட்டுக் குழந்தை அப்பா. இனிமேல் இவளுக்கு இந்த வீட்டிலே சொந்தம் உண்டு" என்றாள் காமாட்சி.
வேதாந்தம் அருகில் கிடந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார்.
"அம்மா, காமாட்சி. கொஞ்சம் எனக்குப் புரியும் படியாகத்தான் சொல்லேன். மூக்கும் விழியுமாக சந்திர பிம்பம் போல இருக்கும் இந்தக் குழந்தை பிறந்தவுடனேயே பெற்றவர்களை இழந்த துர்பாக்கியசாலியா? எனக்கு ஒன்றும் புரியவில்லையே!"
தொட்டிலில் இருந்த குழந்தைப் பாலை பருகிய வுடன் அப்படியே அயர்ந்து தூங்கி விட்டது. அதன் வாய் அருகே கசிந்திருந்த பாலை மெதுவாகத் துடைத்து விட்டு, மேலே கட்டி இருந்த கொசுவலையை அவிழ்த்துத் தொங்க விட்டாள் காமாட்சி. பிறகு தன் தகப்பனாரின் எதிரில் வந்து உட்கார்ந்து கொண்டாள்.
"அப்பா! இந்தக் குழந்தை பிறந்து இன்று பதினோரு நாட்கள் ஆகின்றன. இன்று பகல் பன்னிரண்டு மணி வரைக்கும் இதற்கும் இதன் தாய்க்கும் சம்பந்தம் இருந்தது. பிறகு அந்த சம்பந்தம் நீங்கி விட்டது. இனி மேல் நான்தான் இந்தக் குழந்தைக்குத் தாய்" என்றாள். இதைக் கேட்ட வேதாந்தத்தின் உள்ளம் பரபரப் படைந்தது.
"ஏனம்மா ! குழந்தையின் தாய் இறந்து விட்டாளா? தகப்பன் குழந்தையைக் கவனிக்கவில்லையா? வேறு உற்றார் உறவினர் இந்தக் குழந்தைக்கு யாரும்
இல்லையா?"
காமாட்சியின் கண்கள் கலங்கி இருந்தன. அன்று காலை ஆஸ்பத்திரியில் நிகழ்ந்த சம்பவங்கள் வரிசையாக அவள் மனக் கண் முன்பு தோன்றின. அந்த வார்டு'க்கு அவள் தான்