”அதனால் எனக்கு மறுமணம் செய்து வைத்துக் குழந்தை குட்டிகளுடன் பார்க்க ஆசைப்பட்டீர்கள். அப்படித்தானே?" என்றாள் காமாட்சி.
வேதாந்தம் வெட்கத்துடன் தலையைக் குனிந்து கொண்டார்.
"அப்பா!" என்று ஆசையுடன் அழைத்த அவள் அவர் அருகில் வந்து வற்றி உலர்ந்து போன அவர் கரங்கள் இரண்டையும் பற்றிக் கொண்டாள்.
"இங்கே பாருங்கள்! அன்று உங்கள் மருமகன் என்னிடம், ”காமாட்சி! உன்னை நான் ஏமாற்றி விட்டேன்' என்று அரற்றினார். அந்த ஏமாற்றம் என் உள்ளத்தைக் கல்லாக மாற்றி விட்டது. இனிமேல் நான் எதையும் எதிர்பார்க்கப் போவதுமில்லை. ஏமாறப் போவதுமில்லை. குடும்ப வாழ்க்கையில் ஒரு பெண் காண வேண்டிய இன்ப துன்பங்கள் அனைத்தையும் என் தொழிலில் பார்க்கிறேன். கட்டிய கணவனால் கைவிடப் பட்டவளின் துயரைப் பார்த்திருக்கிறேன். மகப்பேறு இல்லை என்று வருந்தும் தாயைப் பார்க்கிறேன் , பெற்ற மகவை இழந்து துடிக்கும் அன்னையைப் பார்க் கிறேன். இவர்களின் துயரங்களில் ஓர் அணுவையாவது துடைக்கும் மகத்தான பேற்றை நான் அடைந்தால் போதும் .."
வேதாந்தம் உபதேசம் கேட்கும் சிஷ்யனின் நிலையில் தம் மகளின் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். உபதேசிப்பது தந்தையாக இருந்தால் என்ன? மகனாகவோ அல்லது மகளாகவோ தான் இருந்தால் என்ன ?
”இன்று நீங்களும் நானும் சேர்ந்தே சாப்பிடலாம். தினம் தான் அப்படி முடிகிறதில்லை. அதோடு உங்கள் பேத்தி இனிமேல் விழித்துக் கொண்டு அழுவாள். வாருங்கள்" என்று அழைத்தாள் காமாட்சி. வேதாந்தம் சிரித்தார். அந்தச் சிரிப்பில் உள்ளத்து நிறைவைக் காண முடிந்தது.
--------------
தொடரும்...