சந்திரனைப் பார்த்து நானும் அத்தை அத்தை என்றே அழைக்கப் பழகிவிட்டேன். என் சொந்த அத்தை வீட்டுக்கு வந்தபோது மட்டும் வேறுபாடு தெரிவதற்காக நம் அத்தை என்றும் சந்திரன் அத்தை என்றும் வேறுபடுத்திப் பேசுவேன். சொந்த அத்தை வந்து போய்விட்டபிறகு அத்தை என்று என் வாய் சொன்னால், அது சந்திரனுடைய அத்தையையே குறித்தது. அந்த அளவிற்கு எங்கள் பழக்கம் குடும்ப உறவாக வளர்ந்து விட்டது.
இப்படி அத்தை எங்கள் வீட்டுக்கு வந்து பழகிக்கொண்டிருந்தபோது ஒரு நாள் பாக்கிய அம்மையாரின் பழக்கமும் ஏற்பட்டது. பாக்கிய அம்மையாரின் வீடு 18ஆம் எண் உடையது. எங்கள் வீட்டுக்கு தெற்கே மூன்றாம் வீடு. ஆகவே நானும் சந்திரனும் அந்த வழியாகவே பள்ளிக்குப் போய் வரவேண்டும். இரண்டாம் நாளே என்னைப் பார்த்து, "அது யார் வேலு!" என்று கேட்டுத் தெரிந்து கொண்டார். அடுத்த வாரத்தில் ஒரு நாள் மாலையில் அத்தை எங்கள் வீட்டில் பேசிக்கொண்டிருந்தபோது பாக்கியமும் வந்தார். அப்போது அம்மா, அத்தை, பாக்கியம் மூன்று பேரும் உட்கார்ந்து கலகலப்பாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். வரவர பாக்கியம் அத்தை, வீட்டுக்கே நேராகப் போகவும் அத்தை நேராகப் பாக்கியத்தின் வீட்டுக்கே போகவும் பழக்கம் முதிர்ந்தது. இரண்டு நாள் பாக்கியத்திற்கு உடம்பு நலிவாக இருந்தபோது, அத்தையே அங்கே போய்ச் சமையலும் செய்து உதவினார். தம்முடைய ஊரிலும் இப்படிப் பல குடும்பங்களின் பெண்களுக்குத் தாய்போல் இருந்து உதவி செய்து அத்தை பெயர் பெற்றிருப்பதாகச் சந்திரன் சொன்னான். சந்திரனோடு அத்தை நகரத்துக்கு வந்ததனால், பெருங்காஞ்சியில் பல பெண்களுக்குக் கையொடிந்தது போல் இருக்கும் என்றும் சொன்னான்.
பாக்கியம் குழந்தை பெற்றுத் தாயாக விளங்காவிட்டாலும் தாய்மையுள்ளம் நிறைந்த அம்மையார். அதனால் என்னையும் என் தங்கை மணிமேகலையையும் மற்றொரு தாய்போல் இருந்து வளர்த்து அன்பு காட்டினார். ஆனால், இயற்கை பொல்லாதது! வளர வளர நாங்கள் இறக்கை வளர்ந்த குஞ்சுகள் போல், பாக்கியத்தின் அன்புக் கூட்டிலிருந்து பறந்துவிட்டோம். எங்கள் அன்பு மாறுவதைப் படிப்படியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் வேதனை பாக்கியத்தின் மனத்துக்கு இருந்திருக்கும்.
மனம் மட்டும் அல்ல, தோற்றமும் அவ்வளவு அழகாகக் கவர்ச்சியாக இருந்தது. ஒரு குடும்பத்தின் தலைவியாக, பல மக்களுக்குத் தாயாக விளங்கவேண்டிய கட்டான உடம்பும் ஈரமான நெஞ்சும் படைத்த ஊழ், அந்த அம்மையாருக்குத் தனிமைத் துன்பத்தையே வாழ்வின் பரிசாக அளித்து விட்டது. நான் என் தாயின் வயிற்றில் இருந்தபோது பாக்கியத்திற்குத்