(Reading time: 38 - 75 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

  

"அதெல்லாம் இருக்கட்டும். யார் வந்திருக்கிறார்கள் சொல். எங்கே இருக்கிறார்கள் சொல்" என்றான்.

  

என்னால் எதையும் மறைக்க முடியவில்லை. உண்மையைச் சொன்னேன். "அய்யோ" என்று தலைமேல் கை வைத்துக் கொண்டு அந்த இடத்திலேயே மண்ணில் உட்கார்ந்தான்.

  

நானும் உட்கார்ந்தேன். "ஒன்றும் கவலைப்படாதே. ஆசிரியர் உனக்கு ஆகாதவரா? அப்பா பகையா? ஏன் இப்படிக் கலங்குகிறாய்? கவலை வேண்டா. சொன்னால் கேள்" என்றேன்.

  

அதற்குள், "என்னாங்க, என்னாங்க! எங்கே போய்விட்டாரோ, தெரியவில்லையே! இப்படித்தான் சொல்லாமலே எங்கேயாவது போய்விடுவார்" என்று தாயம்மாவின் குரல் கேட்டது. இருள் பரவியதால் நாங்கள் நின்றது தெரியவில்லை. பக்கத்து வீட்டு, அம்மா, "யார்? அவரா?" என்றாள். "ஆமாம். கணக்குப்பிள்ளைதான் வந்தார். மாயமாய் மறைந்துவிட்டார். என்ன அவசரமோ, தெரியவில்லை" என்று தாயம்மா எங்கள் பக்கமாகப் பார்த்தாள்.

  

சந்திரன் என் கையைப் பற்றிக்கொண்டு ஒரு மரத்தின் பக்கமாகச் சென்றான். அவனுடைய கருத்தை நான் உணர்ந்து கொண்டேன். எனக்கு ஒன்றும் செய்தி தெரியாது என்று அவன் எண்ணிக்கொண்டான். நானும் அவள் யார் என்று தெரியாதது போல் இருந்தேன்.

  

"நான் இந்த வீட்டில்தான் தங்கிச் சாப்பிடுகிறேன். தெரிந்தவன் ஒருவன் வீடு. அவன் இந்தத் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்கிறான். இங்கே உங்களுக்கு இடம் இல்லை. அப்பாவையும் ஆசிரியரையும் நீயே போய் அழைத்துக் கொண்டு வா. ஒரு தேநீர்க்கடை தெரிந்த கடை இருக்கிறது. அங்கே போய்ப் பேசுவோம். அதற்குள் நானும் அந்த வீட்டாரிடம் சொல்லிவிட்டு வருவேன்" என்றான்.

  

எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவனை விட்டுச் சென்றால், எங்காவது ஓடிவிடுவானோ என்று அஞ்சினேன். எப்படி நம்புவது? கேட்கவும் முடியவில்லை. தயங்கித் தயங்கி நின்றேன்.

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.