(Reading time: 38 - 75 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

கண்டேன். இருள் விரைவாகப் பரவியது. எனக்கு பின் யாரோ வரும் குரல் கேட்டது. நான் அங்கே வேவு பார்ப்பது தெரியாதபடி ஒரு பக்கமாகத் திரும்பி நடந்து அவர்கள் போன பிறகு மறுபடியும் அங்கு வந்தேன். "யார் அது" என்ற குரல் கேட்டு நின்றேன். சந்திரனுடைய குரல் போலவே இருக்கவே, திகைத்துப் பார்த்தேன். மறுபடியும் "யார் அது" என்று கேட்டுக் கொண்டே நெருங்கி வரக் கண்டேன். அவனே வருவதை அறிந்தேன். திடுக்கிட்டு "நான் தான்" என்றேன். "நான்தான் என்றால் யார்?" என்றான். "வேலு" என்றேன். வந்தவன் திடுக்கிட்டுத் தூண்போல் நின்றான். "வேலுவா? நீயா? இங்கே ஏன் வந்தாய்?" என்று அசையாமல் நின்றான். நான் தயங்காமல் நெருங்கிச் சென்று அவனுடைய கைகளைப் பற்றிக் கொண்டு, "சந்திரா! மறந்துவிட்டாயே" என்றேன். என் கைகளில் நீர்த்துளி இரண்டு விழுந்தன. அவன் அழுவது தெரிந்தது. "உன் அம்மா இறந்துவிட்டார்" என்றேன். ஓ என்று கதறத் தொடங்கி, உடனே அடக்கிக் கொண்டு, வீட்டை விட்டு விலகி வந்தான். விம்மினான். குமுறினான்.

  

"சந்திரா!" என்றேன்.

  

"அம்மா இல்லையா? போய்விட்டார்களா? அய்யோ! அம்மா நினைவு அடிக்கடி வந்ததே! நான் பார்க்கவே முடியாதா?" என்று விம்மி அழுதான்.

  

அப்பா வந்திருக்கிறார் என்று சொல்ல வாயெடுத்து, உடனே அடக்கிக் கொண்டேன்.

  

"எப்போது இறந்து போனார்கள்?" என்றான்.

  

"ஒரு மாதம் ஆச்சு."

  

"அய்யோ! என் மனம் என்னவோ போல் இருக்கிறதே" என்று கலங்கினான். சிறிது நேரத்தில் முற்றிலும் மாறியவனாய், "நீ ஏன் இங்கே வந்தாய்! உனக்கு எப்படித் தெரியும்" உன்னோடு யாராவது வந்திருக்கிறார்களா?" என்று படபடப்பாகக் கேட்டான்.

  

"பொறு. சொல்கிறேன். அவசரப்படாதே. அவசரப்பட்டது போதும். உன்னுடைய நன்மைக்காகவே உன்னைத் தேடிக்கொண்டு வந்தேன். நீ இப்படிக் கல்மனத்தோடு பிரிந்து வந்துவிட்டாயே" என்றேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.