மட்டும் தெரியக்கூடாது. தெரிந்தால் என்மேல் வருத்தப்படுவான்" என்றான்.
அவன் சொன்னபடியே அந்த வீடுகளின் பக்கமாகச் சென்று, பின்புறத்து வழியில் நடந்து, அந்த ஆலமரத்தடியில் உட்கார்ந்தோம். போகும்போதே அந்த வீட்டை உற்றுப் பார்த்தோம். வீடு பூட்டியிருந்தது. அங்கே யாரும் இல்லை. ஆலமரத்தின் அடியில் நாங்கள் உட்கார்ந்திருந்தபோது, எங்களை உற்றுப் பார்த்தபடியே ஆண்களும் பெண்களுமாகச் சிலர் போனார்கள். "எந்த ஊர் அய்யா" என்று ஒருவர் கேட்டார். வெளியூர் என்றேன். குன்னூர்ச் சந்தைக்காக இன்றைக்கு வந்திருப்பார்கள்" என்று அவர்களுள் ஒருத்தி சொல்லிக் கொண்டு போனாள்.
கால்மணி நேரம் கழித்துப் பன்னிரண்டு பதின்மூன்று வயது உள்ள சிறுவன் ஒருவன் அந்தப் பக்கமாக வந்தான். அவன் எங்களை நெருங்கி வந்து, "யாரைப் பார்க்க வந்திருக்கிறீர்கள்?" என்றான்.
"சும்மா வந்திருக்கிறோம்" என்றார் ஆசிரியர்.
"கணக்குப்பிள்ளையப் பார்க்கவா?" என்றான் அவன்.
"கணக்குப்பிள்ளை யார்?" என்றேன்.
"அதோ அந்த மூன்றாவது வீட்டில் இருக்கிறார்" என்றான்.
அவனுக்கு வேறு ஏதாவது பேச்சுக் கொடுக்காமல் விட்டால், எங்களைப் புலன் விசாரிப்பான் என்று எண்ணி, "இன்றைக்குக் குன்னூரில் சந்தை அல்லவா? நீ போகவில்லையா?" என்றேன்.
"அம்மா அப்பா போகிறார்கள், எனக்கு என்ன வேலை?" என்றான்.
பிறகு என்ன படிக்கிறாய், வயது என்ன, எந்த ஊர், உடன் பிறந்தவர்கள் எத்தனைபேர் முதலான கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவன் எழுந்து போவதாகத் தெரியவில்லை. திடீரென்று, அந்தப் பக்கமாக வந்து கொண்டிருந்த ஒருத்தியைக் காட்டி, "அதோ அந்த அம்மா