உண்டாக்கி அடிக்கச் சொல்வாள். அப்படித்தான் தன் கணவனுக்குப் பகையாகச் சொல்லிக் கலகம் உண்டாக்கி, ஒரு கொலையும் நடக்கச் செய்து, அவனைச் சிறைக்கு அனுப்பிவிட்டாள். எனக்கு அவளிடம் அனுபவம் உண்டு. எருமைபோல் இருப்பாள். பொல்லாதவள். எப்படியாவது பொய் சொல்லியாவது சந்திரனை அழைத்துக் கொண்டு போய்விட்டால் நல்லது. இங்கே இருந்தால் இன்னும் கொஞ்ச காலத்தில் குடிக்கக் கற்றுக்கொண்டு அடியோடு கெட்டுப்போய் விடுவான்" என்றான்.
என் மனத்தில் ஒரு குமுறல் ஏற்பட்டது. "வரமாட்டேன் என்று பிடிவாதம் செய்தால் என்ன செய்வது?" என்றேன்.
"அப்பாவைக் கண்ணீர்விடச் சொல்லுங்கள். அம்மா காய்ச்சலாக இருப்பதாகச் சொல்லுங்கள்."
"அம்மா இந்தக் கவலையால் இறந்துவிட்டார்."
"அய்யோ? அப்படியா? அதைச் சொன்னால் எப்படிப்பட்டவனுக்கும் மனம் மாறிவிடுமே. எதையாவது சொல்லுங்கள். ஊருக்குப்போய் மறுபடியும் திரும்பிவிடலாம் என்று சொல்லி அழைத்துச் செல்லுங்கள். பிறகு அங்கே போனால் மனம் மாறிவிடும். ஒரு கலியாணம் செய்து கட்டு ஏற்படுத்தி விடுங்கள்."
அவனுக்கு என் வயது, அல்லது இரண்டு வயது கூடுதலாக இருக்கும். இருந்தாலும் நல்ல அனுபவம் உடையவன் போல் பேசினான். துண்டு மீசையும், லுங்கி வேட்டியும் உடையவனாய்த் தேநீர்க் கடைக்குத் தகுந்த தோற்றத்தோடு இருந்தான். அப்படி இருந்தும் நல்ல மனத்தோடு பேசினானே என்று மகிழ்ந்தேன்.
சிறிது தொலைவு எங்களோடு வந்ததும், "அதோ தெரியுதே அந்த வரிசையில் கிழக்கே இருந்து மூன்றாவது வீடு. பயம் இல்லாமல் போகலாம். அவன் வந்து கொஞ்ச நேரம் ஆனபிறகு போய்ப் பாருங்கள். இதோடு நான் நிற்கிறேன்" என்று சொல்லி என்னைப் பார்த்துக் கைநீட்டினான். உடனே குறிப்புத் தெரிந்துகொண்டேன். என்ன செய்வது, வறுமையின் செய்கை என்று எண்ணிக்கொண்டே ஒரு ரூபாய் எடுத்துக் கொடுத்தேன்.
"வேறு ஏதாவது உதவி வேண்டுமானால் வந்து சொல்லுங்கள். ஆனால் நான் சொன்னதாக