குழந்தைகளுக்காகத் தாய் தனி அன்போடு அழைத்து அளிக்கும் தட்ப இன்பம்போல் விளங்கியது அந்த நீலமலையின் குளிர்ச்சி மிக்க காற்று.
அருவங்காட்டில் இறங்கியபோது மணி இரண்டு ஆகியிருந்தது. அங்கே உபதளைக்கு வழிகேட்டுக்கொண்டு சென்றோம். என் மனம் இயற்கையழகை மறந்து கடமையில் மூழ்கியது. எப்படிச் சந்திரனைக் கண்டுபிடிப்பது, என்ன சொல்வது, எப்படி அவன் மனத்தை மாற்றுவது, சாமண்ணாவையும் ஆசிரியரையும் விட்டுச் செல்வதா, அழைத்துச் செல்வதா என்று பலவாறு எண்ணிச் சென்றேன். ஒரு மைல் தூரம் சென்ற பிறகு, வழியில் ஒருவரைப் பார்த்து உபதளை எது என்று கேட்டேன். அவர் ஒரு மலைச்சரிவையும் தோப்பையும் காட்டி அங்கே தெரிந்த ஓட்டுக் கூரைகளையும் காட்டி அந்த ஊர்தான் என்றார். இன்னும் ஒரு மைல் நடக்கவேண்டியிருக்கும் என்று எண்ணிக்கொண்டே மேலும் நடந்தோம்.
ஊர்க்கு வெளியே ஒரு தேநீர்க் கடை இருந்தது. சாந்தலிங்கம் சொன்னது இந்தக் கடையாகவே இருக்கும் என்று எண்ணி, ஆசிரியரையும் சாமண்ணாவையும் வெளியே இருக்கச் செய்து நான் மட்டும் உள்ளே நுழைந்தேன். அங்கே இருந்த இளைஞன் ஒருவனைப் பார்த்து, "இங்கே தேயிலைத் தோட்டத்தில் கணக்குப் பிள்ளையாகச் சந்திரன் என்று ஒருவன் - ஆங்கிலம் படித்தவன் - இருக்கிறானே, தெரியுமா?" என்று கேட்டேன். தெரியாது என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் பாராமலே அவன் போனான். இன்னொருவனிடம் நெருங்கி மெல்லக் கேட்டேன். "இப்படிச் சொன்னால் கண்டுபிடிக்க முடியுமா? இன்ன எஸ்டேட் என்று சொன்னால் வழி காட்டலாம். அங்கே போய்க் கேளுங்கள்" என்றான். மற்றொருவனையும் கேட்டுப் பார்த்தோம். பயன் இல்லை. "இன்னும் ஏதாவது ஒரு தேநீர்க் கடை இருக்கிறதா?" என்று வெளியே வந்து ஒருவரைக் கேட்டேன். "இருக்கிறது. தேநீர்க் கடைக்கு ஒரு குறைச்சலும் இல்லை. அதோ அரைக்கல் தொலைவில் தெரிகிறதே, அதுவும் ஒரு தேநீர்க் கடைதான்" என்று அதற்குச் செல்லும் பாதையும் காட்டினார். அவ்வழியாகச் சென்றோம்.
அந்த வழியே நடந்து சென்று அவர் காட்டிய தேநீர்க் கடையை கண்டுபிடித்தோம். அங்கே தேநீர் தந்து கொண்டிருந்த ஆட்களை உற்றுப்பார்த்தேன். இளைஞனாக இருந்த ஒருவனை அழைத்துச் சந்திரனைப் பற்றிக் கேட்டேன். "நான் இங்கே வந்து ஒருவாரம்தான் ஆச்சு, அதோ அவனைக் கேட்டுப்பாருங்கள்" என்று அவன் வேறொருவனைக் காட்டினான். அவனிடம் நானே சென்று மெல்லக் கேட்டேன். அவன் ஒன்றும் விடை கூறாமல், "நீங்கள் யார்? எந்த ஊர்?", என்று என்னையே திரும்பக் கேட்டான். இவனிடம் செய்தி இருப்பதாகத் தெரிகிறது என்று