எண்ணி, உண்மையைச் சொன்னேன். "சரி, உட்காருங்கள். கூட்டம் குறையட்டும். பிறகு சொல்வேன்" என்றான். மறுபடியும் அவனே என்னிடம் வந்து, "ஒருவேளை அவனே இப்போது இங்கே வந்தாலும் வரலாம். உங்களை இங்கே பார்த்தால், தப்பித்துக் கொண்டு போய்விடுவான். நீங்கள் இங்கே இருக்காமல், அதோ அங்கே அந்தப் பங்களாவின் சுற்றுச் சுவர்க்குப் பின்னே உட்கார்ந்திருங்கள். நானே அங்கே வந்து சொல்வேன்" என்றான். ஆசிரியரும் சாமண்ணாவும் இதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவனுடைய பேச்சைக் கேட்டதும், சந்திரனைக் கண்டுபிடித்தது போன்ற மகிழ்ச்சி எங்களுக்கு ஏற்பட்டது. அவன் சொன்னவாறே அங்கேபோய் உட்கார்ந்திருந்தோம்.
ஒரு மணி நேரம் கழித்து அவன் எங்களிடத்திற்கு வந்தான். "சந்திரன் இன்றைக்கு வர நேரமாகுமாம். அந்தத் தோட்டத்திலிருந்து வந்த ஆளைக் கேட்டோம். அவன் இன்றைக்குக் குன்னூருக்குப் போயிருக்கிறானாம். போய்த் திரும்பி வரும் போது கடைக்கு வருவான். நான் அவனிடம் ஒன்றும் சொல்ல மாட்டேன். நீங்களும் நான் சொன்னதாக ஒன்றும் சொல்லக் கூடாது. இப்போது நேராக அந்தக் குடிசைக்குப் போய்ப் பின்பக்கத்தில் ஒரு ஆலமரம் இருக்கிறதே அங்கே இருங்கள். அவனைப்பற்றி அங்கே யாரிடமும் ஒன்றும் கேட்க வேண்டா. அவன் வந்தபிறகு அந்த வீட்டில் குரல் கேட்கும். அப்போது யாராவது ஒருவர் முன்னே போய்ப் பேசுங்கள். அதற்குமேல் உங்கள் திறமைப்படி நடக்கும். வாருங்கள்; வழிகாட்டுகிறேன்" என்று வெளியே அழைத்துவந்தான்.
வெளியே வந்ததும் ஆசிரியர் அவனைப் பார்த்து, "ஊருக்கு வருவானா?" என்றார்.
"நான் எப்படிச் சொல்வது? இப்போது என்னோடு நெருங்கிப் பழகுவதில்லை. முன்போல் இருந்தால் நானே சொல்ல முடியும். இப்போது சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டான்" என்றான் அவன்.
என்னுடைய அனுபவம்போல் இருக்கிறதே என்றும், சந்திரனுடைய பழைய குணம் இன்னும் மாறவில்லை போல் இருக்கிறதே என்றும் எனக்குள் எண்ணிக்கொண்டேன்.
என்னை மட்டும் தனியே அழைத்துச் சென்று, அவனுடைய அப்பாவிடம் சொல்லாதீர்கள். அந்த வீட்டுக்காரி நல்லவள் அல்ல. சந்திரனை நெடுங்காலம் வைத்துக் கொண்டிருக்கமாட்டாள். வேண்டா என்ற எண்ணம் வந்தபோது, யாராவது ஒரு முரடனுக்குச் சொல்லிக் கலகம்