"குற்றம் செய்வது இயற்கை. திருந்துவதில் தவறு என்ன? என்னைவிட நீ எவ்வளவு வல்லவன்! உன் வாழ்க்கை நல்லபடி இருக்கும் புறப்பட்டு வா."
"நாளைக்குச் சொல்வேன்."
"அப்படி ஒத்தி வைக்காதே. உன் கணக்கு முதலியவைகளை எல்லாம் காலையில் ஒப்படைத்துவிட்டுப் புறப்படு"
"அய்யோ! நான் வேலையைவிட்டு ஊர்க்கு வருவது தெரிந்தால் இங்கே ஒரே ஆரவாரம் ஆகிவிடும்."
இவ்வளவும் அவன் வழியைப் பார்த்தோ, வானத்தைப் பார்த்தோ சொன்னானே தவிர, என்னுடைய முகத்தைப் பார்த்துச் சொல்லவில்லை. தப்பித் தவறி அவன் என் முகத்தைப் பார்த்தால் அப்போது என்னால் நேராகப் பார்க்க முடியவில்லை. நான் பார்வையை மாற்றிக்கொண்டேன். ஏதோ ஒன்று எங்கள் இருவருடைய உள்ளங்களுக்கும் இடையே குறுக்கே இருந்ததை உணர்ந்தேன்.
"அப்படியானால் ஒன்று செய். அவசரமாக ஊருக்குப் போய் வரவேண்டும் என்று மூன்று நான்கு நாள் விடுமுறை கேட்டுப் புறப்படு. அங்கே வந்த பிறகு கடிதம் எழுதிப் போட்டு நின்று விடலாம்."
"பார்க்கலாம்."
அதை அவன் சொன்னபோது, பழைய புறக்கணிப்பின் தன்மை இருந்தது. அதற்குமேல் என்னால் பேச முடியவில்லை.
தேநீர்க்கடையும் வந்துவிட்டது. அந்த இளைஞன் எதிரே இருந்தான். "நீங்கள் இங்கே இருங்கள். நான் அந்த வீட்டு வரைக்கும் போய் வந்துவிடுவேன்" என்று என்னைப் பார்க்காமல் நகர்ந்தான். நானும் வாய் திறக்கவில்லை. ஆசிரியரும் பேசாமல் இருந்தார். சாமண்ணா மட்டும் "சந்திரா!"