சந்திரன் கூர்மையான அறிவு படைத்திருந்தும் இதைத் தெரிந்து கொள்ளவில்லையே. தன் ஊரில் - கிராமத்தில் பெரிய வீட்டுப் பிள்ளையாய் எல்லோரும் ஏவல் செய்து பணியும் பெருமையோடு வளர்ந்தது காரணமாக இருக்குமா? அல்லது புத்தகப் படிப்பாக இருந்தாலும் நாடக நடிப்பாக இருந்தாலும் எதிலும் மற்றவர்கள் போட்டியிட்டு நெருங்க முடியாத அளவுக்குத் தனிச் சிறப்போடு உயர்ந்து நிற்கக்கூடிய அறிவின் திறமையால் ஏற்பட்ட தன்னம்பிக்கை காரணமாக இருக்குமா என்று எண்ணிக்கொண்டே பொழுது விடியும் நேரத்தில் உறங்கி விட்டேன்.
விழித்தபோது, அந்த இளைஞன் அங்கே இல்லை. தேநீரும் சிறு சிற்றுண்டியும் செய்து கொண்டிருந்தான். ஆசிரியரும் சாமண்ணாவும் பல் துலக்கிக் கொண்டிருந்தார்கள். காலைக் கடன்களை முடித்துவிட்டு, சந்திரன் வருவான் வருவான் என்று ஆவலுடன் அந்த வழியையே நோக்கிக் கொண்டிருந்தோம். மணி எட்டும் ஆயிற்று. ஒன்பதும் ஆயிற்று. அவன் வரவில்லை. சாமண்ணாவின் மனத்தில் இருந்த ஏமாற்றமும் திகைப்பும் எங்கள் மனத்திலும் புகுந்தன. கடைக்கார இளைஞனும் வருந்தினான். ஆனாலும் நம்பிக்கை ஊட்டிக்கொண்டே இருந்தான்.
சரியாக ஒன்பதரை மணிக்குச் சந்திரன் வெறுங்கையோடு வந்து சேர்ந்தான். கையில் ஏன் ஒன்றும் எடுத்து வரவில்லை என்று எண்ணினோமே தவிர, ஒருவரும் கேட்கவில்லை. அவன் வந்ததே போதும் என்று மகிழ்ச்சியோடு நோக்கினோம். கடைக்கார இளைஞனை அழைத்தான். அவன் கையில் இரண்டு ரூபாய் கொடுத்து, "தபால் எழுதுவேன்" என்று சொல்லிவிட்டு, ஆசிரியரைப் பார்த்து "வாங்க போகலாம்" என்றான். சாமண்ணாவின் முகத்தில் அப்போதுதான் மலர்ச்சி காணப்பட்டது. கடைக்கார இளைஞன் என்பின் வந்து, என் காதில் மட்டும் விழும்படியாக, "அப்படியே எனக்கும் ஒரு வேலை பார்த்து எழுதினால் நானும் அங்கே வந்துவிடுவேன்" என்றான். அவனுக்கு நம்பிக்கையாகச் சொல்லித் தலையசைத்துவிட்டு நகர்ந்தேன். ரயில் நிலையத்துக்கு வந்த சிறிது நேரத்திற்கெல்லாம் ஒரு வண்டி வந்தது. அதில் ஏறினோம்.
பயணத்தின்போது உணவு, சிற்றுண்டி, காப்பி இவற்றிற்காகப் பேசியது தவிர, வேறு எந்தப் பேச்சும் பேசவில்லை. நான்குபேரும் பேசா நோன்பு பூண்டவர்கள் போலவே வந்தோம். சந்திரனுடைய முகத்தை அடிக்கடி கவனித்தேன். அதில் தயக்கமோ தடுமாற்றமோ கலக்கமோ ஒன்றும் காணோம். கல்லூரி விடுதியைவிட்டு ஒருநாள் எப்படித் துணிந்து மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் வந்து விட்டானோ, அப்படியே நீலகிரியை விட்டுத் துணிந்து