(Reading time: 38 - 75 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

என்றார். "காலையில் வருவேன் அப்பா" என்று திரும்பிப் பார்க்காமல் நடந்தான்.

  

அதே நேரத்தில் அவனுடைய நெஞ்சில் ஒருவகை முரட்டுத் தன்மை இருந்தது என்பதை அவனுடைய சொல்லாலும் பார்வையாலும் உணர்ந்தேன். மேலும் வற்புறுத்தி ஏதாவது சொன்னால் பயன்படாமல் போகும் என்று பேசாமல் இருந்தேன். அந்தக் கடைக்கார இளைஞனும், "அதுதான் சரி, மெல்லத்தான் திருப்பணும்" என்றான்.

  

அன்று இரவெல்லாம் சாமண்ணாவின் மனக்கலக்கத்திற்கு மருந்து கொடுப்பதே பெருந்துன்பமாக இருந்தது. "பையனைத் தனியாக விட்டுவிட்டோம். உயிருக்கு ஏதாவது தேடிக்கொண்டால் என் கதி என்ன?" என்று எழுந்து எழுந்து அலறினார். ஒரு பக்கம் நீலகிரியின் குளிர் எங்களை வாட்டியது. மற்றொரு பக்கம் அவருடைய துயரம் வாட்டியது. கடைக்கார இளைஞன் சிறிது நேரம் எங்களோடு விழித்திருந்து பிறகு தன்னை மறந்து குறட்டை விட்டுத் தூங்கினான்.

  

விடியற் காலையில் அவன் விழித்துக் கொண்டதும் என்னிடம் நம்பிக்கையோடு சொன்னான். "அவர் ஒரு மாதிரியானவர். பொழுது விடியட்டும் பாருங்கள். அவரே வந்து புறப்படுங்கள் என்று சொன்னாலும் சொல்வார்" என்றான்.

  

"நீ கொஞ்சம் சொல்லக்கூடாதா?" என்றேன்.

  

"அய்யோ! சொல்லக்கூடாது. முன் கோபக்காரர். பேசாமல் இருந்து விடுவது நல்லது. நான்தான் முதலிலேயே சொன்னேனே. நான் உங்களுக்குச் சொல்லி அனுப்பியதே தெரியக்கூடாது" என்றான்.

  

திக்கு இல்லாமல் வந்து சேர்ந்த வெளியூரிலும் சந்திரன் இப்படி மற்றவர்களை அடக்கி வைத்திருக்கிறானே? ஒத்த உரிமை கொடுத்துப் பழகாமல் இப்படி உயர்வு மனப்பான்மையோடு முன் கோபத்தோடு பழகுவதாலேயே இவன் இடறி இடறிக் கெடுகிறான் என்று எனக்குத் தோன்றியது. ஒத்த உரிமையோடு பழகினால்தான் மற்றவர்கள் நெருங்கி வந்து அறிவுரை கூறமுடியும். திருத்த முடியும். மற்றவர்களுக்கு என்ன தெரியும் என்று அறிவுச் செருக்கோடு நடந்தால் வழுக்கி விழும்போதும் துணை இல்லாமல் விழுந்து துன்புற வேண்டியிருக்கிறது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.