Flexi Classics தொடர்கதை - வாடா மல்லி - 01 - சு. சமுத்திரம்
வாடா மல்லி, அத்தியாயம் - 1
சுயம்பு அந்த சூட்கேஸைப் பிடித்துக் கொண்டிருந்த விதம், அதுவே அவனைக் கௌவிக் கொண்டிருப்பது போல் தோன்றியது.
ஒரு கையால் பிடிக்க வேண்டிய சூட்கேஸை முதுகில் சார்த்தி வைத்துக் கொண்டு பின்புறமாய் இரண்டு கைகளையும் தோள் வழியாய்க் கீழே கொண்டு போய், அதன் சின்னப் பிடியில் பெரிய 'பிடி' போட்டு, எதுவும் பிடிபடாதவன் போல், அந்தத் தார்ச்சாலையில் குறுக்கும் நெடுக்குமாய் அலைமோதினான். சிறிது நேரத்தில் பெட்டியைப் பிடித்த இரு கரங்களையும் விடுவித்து, தலையில் வைத்த போது அந்தப் பெட்டி கீழே விழுந்து சத்தம் போட்டது. அது புரியாமலே, அவன் அங்குமிங்குமாய்ச் சுற்றினான். பிறகு மீண்டும், இரு கரங்களையும் பின்புறமாய்க் கொண்டு போய், விரல்களை மடக்கிக் கொண்டான். பெட்டியை மீண்டும் பிடித்திருப்பதாக அவனுக்கு ஒரு அனுமானம்.
மேற்கும், கிழக்குமாய், போய்க் கொண்டிருந்த அந்த தார்ச்சாலையைப் போலவே, அதே கனத்தில் அந்தகாரமான இருள். அந்தப் பகுதி முழுவதையும் ஆட்டி வைத்துக் கொண்டிருந்த அசுரத்தனமான இருள். பேய் இரைச்சலான காற்று. அதற்கு ஏற்றாற்போல் பேய்த்தனமான ஆடும் சவுக்கு மரங்கள். தொலைவிலுள்ள ஒரு குட்டையில் 'அய்யோ... அய்யோ' என்பது மாதிரியான தவளைக் கத்தல்கள். அந்தப் பகுதி முழுவதுமே, மேலே கறுப்புக் குகை போன்ற ஆகாய மூடியால் அடைபட்டிருப்பது போன்ற தோற்றம்... பல்வேறு மரங்கள், இருட்கோடுகளாய், இருளின் அடர்த்தியை கூட்டிக் கொண்டிருந்தன. ஆனாலும் ஆங்காங்கே மின்மினிப் பூச்சிகள் சின்னச் சின்ன ஒளி முத்துக்களைச் சிதறிக் கொண்டிருந்தன. அவ்வப்போது மேகம் சினந்து காட்டிய உயரவாக்கிலான மின்னல் பல்வரிசையின் ஒளி பட்டு தரையில் கிடந்த சில ஜரிகைக் காகிதங்கள் ஒளி வடிவில் ஒளிர்ந்தன.
சுயம்பு, தலையை மேலும் கீழுமாய் பக்கவாட்டிலும் ஆட்டிக் கொண்டான். உடம்புக்குள் சிறைப்பட்ட ஏதோ ஒன்றை விடுவிக்கப் போவதுபோல், வாயகல, நின்ற இடத்திலேயே நின்றான். பின்னர் அந்த 'ஏதோ ஒன்றுக்குள்' சிறைபட்ட மேனிக்காக விடுதலைப் போராட்டம் நடத்துவது போல் அங்குமிங்குமாய் தன்னை உதறிக் கொண்டான். அந்த உடம்பிற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல் தலையை தனிப்படுத்திக் காண்பித்தான். கைகளை